• June 19, 2025
  • NewsEditor
  • 0

கவிஞர் வைரமுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு, தான் எழுதிய பாடல்களின் பல்லவிகள் பலவற்றை மரியாதைக்குக்கூட தன்னிடம் கேட்காமல் திரைப்பட தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

மேலும், ஒரு வார்த்தை தன்னிடம் கேட்டுவிட்டுச் செய்வது அவர்களுக்கு நாகரீகமாகாதா? என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், தான் எழுதும் பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் எனத் தன்மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வைரமுத்து, “என்மீது ஒரு பழிஉண்டு பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால், அதற்கு நான் உடனே உடன்படுவேன்; மாற்றியும் கொடுப்பேன்; கொடுத்திருக்கிறேன்.

புன்னகை மன்னன் படத்தில் ‘வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்’ என்றொரு பாட்டு.

மழையில் நனையும் ஒரு மான்குட்டி தன் கவிதையால் மழையைக் குளிப்பாட்டும் பாட்டு.

‘மழைத்துளி தெறித்தது, எனக்குள்ளே குளித்தது, நினைத்தது பலித்தது, உயிர்த்தலம் சிலிர்த்தது’ என்று எழுதியிருந்தேன்.

‘உயிர்த்தலம் என்பதை மட்டும் மாற்றிக்கொடுங்கள்’ என்றார் இசையமைப்பாளர்.

ஏன் என்றேன்? ‘நீங்கள் எழுதிய பொருளில் புரிந்துகொள்ளாமல் அதைப் பெண்ணுறுப்போடு சம்பந்தப்படுத்திப் பிரச்னை செய்வார்கள்’ என்றார்.

சிந்தித்தபோது சரியென்றே பட்டது. நான் உடனே ‘நினைத்தது பலித்தது, குடைக்கம்பி துளிர்த்தது’ என்று மாற்றிக்கொடுத்தேன். இதில் நியாயம் இருக்கிறது.

இன்னொரு படம் மனிதன். அதில் ‘வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்’ என்றொரு பாடல். “குரங்கிலிருந்து பிறந்தானா, குரங்கை மனிதன் பெற்றானா, யாரைக் கேள்வி கேட்பது, டார்வின் இல்லையே” என்று எழுதியிருந்தேன்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் உதவியாளர் லட்சுமி நாராயணன் என் காதோடு வந்து, ‘டார்வின் என்பதை மட்டும் மாற்றுங்கள்; அது எல்லாருக்கும் புரியாது’ என்றார்.

நான் புன்னகையோடு சொன்னேன்: ‘தெரிந்ததை மட்டும் சொல்வதல்ல பாட்டு; தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதும் பாட்டு’ என்று மாற்ற மறுத்துவிட்டேன்.

எஸ்.பி.முத்துராமனிடம் சென்று நான் சொன்னதைச் சொல்லியிருக்கிறார். அவரும் இதற்குமேல் வற்புறுத்த வேண்டாம் என்று வருத்தத்தோடு விட்டுவிட்டார்.

டார்வின் பேசப்பட்டது. இப்படி நியாயமான பொழுதுகளில் மாற்ற மறுத்திருக்கிறேன்.

பாட்டுவரியின் திருத்தத்தைப் பொருளமைதியே தீர்மானிக்கிறது; நானல்ல. ஆனால் பழி என்மீதே வருகிறது. என்ன செய்ய?” என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *