• June 19, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் இருக்கும் ஒரு நகைக்கடைக்கு, 93 வயது முதியவர் தன் மனைவியுடன் வருகிறார். அவரை வரவேற்ற கடை உரிமையாளர் என்ன வேண்டும்? எனக் கேட்கிறார்.

அதற்கு அந்த முதியவர், “இவர் என் மனைவி. அவருக்கு நீண்ட நாள்களாக தங்கத் தாலி அணிய வேண்டும் என ஆசை. அதனால், கொஞ்சம் காசு சேமித்து வைத்திருக்கிறோம். அதை வைத்து தங்கத் தாலி வாங்க வேண்டும் என வந்திருக்கிறோம்” என்கிறார்.

அவர்களின் உரையாடல், கள்ளமில்லா சிரிப்பு, கண்களால் பரிமாறப்படும் காதல் என அவர்களைப் பார்க்கவே அற்புதமான உணர்வு நமக்கும் தொற்றிக்கொள்கிறது.

கடை உரிமையாளர்,“சரி உங்களிடம் எவ்வளவுப் பணம் இருக்கிறது” எனக் கேட்க, முதியவரின் மனைவி, தன் மடி முடிப்பிலிருந்து சில நோட்டுகளை எடுத்து வெளியே வைக்கிறார்.

இதற்கிடையில் தாலிகள் இருக்கும் நகைப்பெட்டியிலிருந்து ஒன்றை தேர்வு செய்கிறார். அந்தப் பணத்தை கடைக்காரர் எண்ணும்போது அந்த முதியவர் ‘பணம் போதவில்லை என்றால் இதோ என்னிடம் இன்னும் இருக்கிறது’ என அவரின் கைப்பையிலிருந்து சில்லரைகள் முடிந்து வைத்திருக்கும் சிறு மூட்டையை எடுக்கிறார்.

இறுதியில், அந்தக் கடைக்காரர் வந்திருந்த முதிய தம்பதியிடம் கலகலப்புடன் பேசி அவர்களை சிரிக்க வைக்கிறார். பிறகு அவர்கள் தேர்வு செய்த நகையை அவர்களிடம் கொடுத்துவிட்டு, ‘இந்த நகைக்கு 20 ரூபாயும், உங்களின் ஆசீர்வாதமும்தான் விலை” என அவர்களின் 1100 ரூபாய் பணத்தை திரும்ப அந்த முதிய தம்பதியிடம் கொடுத்துவிடுகிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த தம்பதி, கண்களில் கண்ணீர் கசிய அங்கிருந்து புறப்படுகிறார்கள். இந்த வீடியோ காட்சி காண்போரை தன்னையறியாமல் புன்முறுவல் பூக்கச் செய்கிறது. ஆம் அதற்குப் பெயர்தானே காதல்.

காதல்… அதுதானே எல்லாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *