
டி.என்.பி.எல் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது கொடுத்தப் புகாரை மதுரை பாந்தர்ஸ் அணி திரும்ப பெற முடிவு செய்திருக்கிறது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடந்த 14-ந் தேதி சேலத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அன்றைய ஆட்டத்தில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனம் தடவப்பட்ட துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்திருந்தது.
இது தொடர்பாக பேசியிருந்த டி.என்.பி.எல். தொடரின் தலைமை செயல் அதிகாரி பிரசன்னா கண்ணன், “ மழை காரணமாக மைதானம் ஈரமான நிலையில், பந்தை துடைக்க, டி.என்.பி.எல்., நிர்வாகம் சார்பில் துண்டு (‘டவல்’) கொடுக்கப்பட்டது. . போட்டியின் போது, பந்து குறித்து எவ்வித பிரச்னையும் எழவில்லை. சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் புகார் தெரிவிக்க வேண்டும்.
எனினும் மதுரை அணியின் புகாரை ஏற்றுக் கொள்கிறோம். இதுகுறித்த ஆதாரத்தை இன்று மதியம் 3:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் உண்மை உள்ளதா என விசாரிக்கப்படும். புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை எனத் தெரியவந்தால், மதுரை அணி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.”என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விளையாட்டு மற்றும் டி.என்.பி.எல் போட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய ஆலோசனைக்குப் பிறகு , மதுரை பாந்தர்ஸ் அணி பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக தாங்கள் அளித்தப் புகாரைத் திரும்ப பெற்றுக் கொள்ள முடிவெடுத்திருக்கிறது. அதே போல திண்டுக்கல் அணியின் கேப்டன் அஷ்வின், போட்டி நடுவர்கள் மற்றும் டி.என்.பி.எல்.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அவமதிக்கும் நோக்கில் புகார் அளிக்கவில்லை என்று மதுரை அணி விளக்கம் அளித்திருக்கிறது.