• June 18, 2025
  • NewsEditor
  • 0

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் (ஜூன் 20) முதல் இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ரோஹித் சர்மா விளையாடாத இரண்டு போட்டிகளில் பும்ரா கேப்டனாகச் செயல்பட்டார்.

பின்னர், ரோஹித் ஐ.பி.எல் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த சமயத்திலேயே திடீரென சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிக்கவே, இந்திய டெஸ்ட் அணிக்கு பும்ராதான் அடுத்த கேப்டனாக வருவார் என்று பேச்சு அடிபட்டது.

ஜஸ்பிரித் பும்ரா

ஆனால், ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தின்போது, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியை அறிவித்த பி.சி.சி.ஐ, டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில்லையும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டையும் நியமித்தது.

அதோடு, உடற்தகுதி காரணமாக மூன்று டெஸ்ட் போட்டிகளில்தான் பும்ரா விளையாடுவார் என்றும் தெரிவித்தது.

மறுபக்கம், பும்ராவை ஏன் கேப்டனாக நியமிக்கவில்லை என்று பலரும் கேள்வியெழுப்பிய வண்ணம் இருந்தனர். இந்த நிலையில், அத்தகைய கேள்விகளுக்கு பும்ராவே தற்போது பதிலளித்திருக்கிறார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports) ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய பும்ரா, “கேப்டன்சிக்காக பி.சி.சி.ஐ என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால், அது வேண்டாம் என்று நான் சொல்ல வேண்டியிருந்தது.

ஒரு தொடரில் மூன்று போட்டிகளில் ஒருவரும், இரண்டு போட்டிகளில் இன்னொருவரும் கேப்டன்சி செய்வது அணிக்கு சரியாக இருக்காது. என்னைப் பொறுத்தவரை அணிதான் முதன்மை.

ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா

அதனால் நானே பி.சி.சி.ஐ-யை அழைத்து, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் நான் விளையாட முடியாது என்பதால், என்னை கேப்டன்சியில் பார்க்க நான் விரும்பவில்லை என்று கூறினேன்.

இதைத்தாண்டி, இதில் வேறெந்த கதைகளும் இல்லை. ‘நான் நீக்கப்பட்டேன்’, ‘நான் கவனிக்கப்படவில்லை’ போன்ற சர்ச்சைகள், தலைப்புச் செய்திகள் எதுவும் இதில் கிடையாது.” என்று கூறினார்.

மேலும், கேப்டன்சி ஏற்பதில் பணிச்சுமை மற்றும் முதுகுவலி போன்ற உடல்நிலை குறித்து பேசிய பும்ரா, “ரோஹித், கோலி ஓய்வுபெறுவதற்கு முன்பாகவே பி.சி.சி.ஐ-யிடம், ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எனது பணிச்சுமை குறித்து விவாதித்தேன்.

எனது முதுகுவலி அறுவை சிகிச்சை நிபுணரிடமும் பேசினேன். அவர் எப்போதும் பணிச்சுமை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்.

ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா

அதனால், நானும் ஒரு முடிவுக்கு வந்தேன். கேப்டன்சி என்பது முக்கியமானது. அதற்காக நான் கடுமையாக உழைத்தேன்.

ஆனால், சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமாக அதைவிட முக்கியமானதை நீங்கள் பார்க்க நேரிடும்.

கேப்டன்சியை விடவும் கிரிக்கெட்டை நான் அதிகம் விரும்புகிறேன். ஒரு வீரராக இந்திய அணிக்கு நிறைய பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்.

வெளிப்படையாகச் சொன்னால் எனக்கு நிறைய லட்சியங்கள் இருக்கின்றன.” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *