
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி ராமு. படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தே.மு.தி.க-வில் இணைந்து கட்சி பதவிகளை வகித்து வந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க – வில் இணைத்துக் கொண்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில் குன்னூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.
கோத்தகிரி அருகில் உள்ள கொணவக்கரை கிராமத்தைச் சேர்ந்த திலக் என்பவர் சாந்தி ராமு மற்றும் அவரின் உறவினர்கள் முத்திரைத் தாளில் போலி ஆவணங்களை இணைத்தும் தேதிகளில் திருத்தம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், முன்னாள் எம்.எல்.ஏ. சாந்தி ராமு மற்றும் அவரின் சகோதரர் ராஜன் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்டோர்

ஊட்டி முத்திரைத்தாள் விற்பனையாளர் கோஷி என்பவரிடம் கடந்த 2012 – ம் ஆண்டு பிப்ரவரி 8 மற்றும் 12 – ம் தேதிகளில் முத்திரைத் தாள்களை வாங்கி அந்த முத்திரைத்தாள்களில் உள்ள தேதியை மாற்றி திருத்தம் செய்தததும், அதே முத்திரைத்தாளில் போலியான ஆவணங்களைத் தயாரித்து இணைத்துப் பதிவு செய்திருப்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சாந்தி ராமு உள்ளிட்ட 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர், ” சாந்தி ராமு முத்திரைத் தாள் மோசடியில் ஈடுபட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
அதனைத் தொடர்ந்தே மாவட்ட பதிவாளர் முன்னிலையில் விசாரணையும் நடத்தப்பட்டது. தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலை என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் உள்ள முத்திரைத்தாள்கள் தேதிகள் மாற்றப்பட்டிருப்பது விசாரணை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.

அரசை ஏமாற்றி போலி முத்திரை தாள் பயன்படுத்தி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் தேதியை திருத்தம் செய்து போலியாக ஆவணங்கள் தயாரித்து அந்த ஆவணத்தை வைத்து பதிவு செய்த குற்றத்திற்காக சாந்தி ராமுவை முதன்மை குற்றவாளியாக இணைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாந்தி ராமு தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறோம்” என்றனர்.