• June 17, 2025
  • NewsEditor
  • 0

“காவல்துறை உயர் அதிகாரியே கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது, தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…” என்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

ஏடிஜிபி கைது சம்பவம்

மதுரை திருமங்கலத்தில் மாமன்னர் மருது பாண்டியர்களின் ஜம்புத் தீவு பிரகடன நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “மருது பாண்டியர்களின் ஜம்புத் தீவு பிரகடன நாள் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த நாள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

– இராம ஸ்ரீநிவாசன்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அபாயகரமானதாகும். காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவத்தை மிகவும் சீரியஸாக பார்க்க வேண்டும். இச்சம்பவத்தில் காவல்துறைக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள கூட்டை பார்க்க முடிகிறது.

எந்த பிரச்னையாக இருந்தாலும் சாதாரண மக்கள் நம்புவது காவல்துறையைத் தான். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறார்கள்.

ஆனால், காவல்துறை உயர் அதிகாரியே இப்படி நடந்து கொண்டால் மக்கள் எங்கே செல்வது? தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

`ஸ்டெர்லைட் ஆலை மூடல் சீனாவுக்கு லாபம்’

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் விலை அதிகரித்துள்ளது. தூத்துக்குடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது, காப்பர் ஆலை மூடப்பட்டால் சீனாவிலிருந்து நாம் வாங்கக்கூடிய நிலை ஏற்படும். மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் பரவுவதாக சொல்கிறார்கள், ஆனால் மதுரை, நெல்லை பகுதிகளில் உள்ள கேன்சர் நோயாளிகள்போல் தான் தூத்துக்குடியிலும் உள்ளார்கள். காப்பர் ஆலையை திறக்காததால் தூத்துக்குடியில் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சீனாவுக்கு தான் அதிக லாபம்.

இராம ஸ்ரீநிவாசன்

கீழடி நாகரிகம்

தமிழகத்திற்கு எந்த திட்டங்கள் கொண்டு வந்தாலும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாளர்களை காப்பாற்றுவோம் என்பார்கள். ஆனால், அதற்கு தொழில் காப்பாற்றப்பட வேண்டுமே?'” என்றவரிடம்,

“கீழடி நாகரிக வரலாறை மத்திய அரசு மறைக்க பார்க்கிறது என தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறதே” என்றதற்கு,

“கீழடி மிகவும் தொன்மை வாய்ந்த நாகரீகம். சிந்து சமவெளி நாகரிகத்தை விட சிறந்தது வைகை நாகரிகம். மத்திய அமைச்சர் கீழடி நாகரிகம் குறித்து இன்னும் அறிவியல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளார், ஆய்வுக்குப் பிறகு கீழடி நாகரீகம் குறித்து அறிக்கை வெளியிடப்படும் “

`தமிழ் முறைப்படி மந்திரங்கள்’

“திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்தே” என்ற கேள்விக்கு,

“நிச்சயமாக வரவேற்கிறேன், தமிழ் முறைப்படி மந்திரங்கள் சொல்வதை நாங்கள் வரவேற்கிறோம், அதேபோல் இஸ்லாமிய மந்திரங்களும் தேவாலய மந்திரங்களும் தமிழில் ஒலிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்றார்.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா

பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி

“2026-இல் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?” என்றதற்கு,

“அவருடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றுதான் கூறியுள்ளார். பாஜக ஆளுகிற மாநிலங்களிலும் மற்ற கூட்டணி கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்றுதான் சொல்வோமே தவிர பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சி என்று சொல்லப் போவதில்லை.

இந்தியா முழுவதுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று சொல்லித்தான் பழக்கம். அதையேதான் அமித்ஷாவும் கூறியுள்ளார். 2026-இல் அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும் அது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றுதான் சொல்வோம், அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றுதான் சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் இப்படி குதர்க்கமாக கேள்வி கேட்பார்கள் என்று அமித்ஷாவுக்கு தெரியாது” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *