
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மணிமேகலை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினம்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளும், புலவனூர் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
அதனடிப்படையில் நேற்று மாலையும் புலவனூர் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அப்போது சாலை ஓரத்தில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞர், மூதாட்டி மணிமேகலையை வலுக்கட்டாயமாக அருகில் இருந்த சவுக்குத் தோப்புக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது மணிமேகலை சத்தம் போட்டதால் அவரது வாயை கைகளால் மூடிய அந்த இளைஞர், அதன்பிறகு வாயில் மண்ணை அள்ளிக் கொட்டியிருக்கிறார். தொடர்ந்து முதாட்டியின் உடைகளை கிழித்து, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதையடுத்து அவர் அணிந்திருந்த நகைகளை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றிருக்கிறார்.
இந்த கொடூர சம்பவத்தால் சவுக்குத் தோப்பிலேயே மயங்கிக் கிடந்திருக்கிறார் மணிமேகலை. இயற்கை உபாதைக்காக அந்தப் பக்கம் சென்ற பொதுமக்கள், மயங்கிக் கிடந்த மணிமேகலையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.