• June 17, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையானது மிகவும் பரபரப்பான பிரதான சாலையாகும். இந்த பிரதான டி.எஸ்.ஃஎப் சாலையில் ரவுண்டானா அமைக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், பல நாள்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருப்பதால், சாலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், விரைவில் நடவடிக்கைகள் எடுத்து சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், “ரவுண்டானா அமைப்பதாக கூறி, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே, சாலையின் நடுவில் மணல் மூடைகளை அடுக்கி மாநகராட்சி சார்பில் வட்டம் போட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் எந்த சாலை கட்டுமான பணியும் மாநகராட்சி சார்பில் இன்னும் தொடங்கப்படவில்லை. ரவுண்டானா அமைக்கப்பட உள்ள சாலையின் அருகே பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ள நிலையில், சாலை சீரமைக்கப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது, விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

பள்ளி விடுமுறையில் இருந்தபோது, ரவுண்டானா அமைக்கப்பட்டிருந்தால் தற்போது எந்த பிரச்னையும் இருந்திருக்காது. ஆனால், இப்போது பள்ளி நேரங்களில் சாலை முழுவதும் மாணாக்கர்களால் நிறைந்து போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

மேலும், சாலையை கடந்து செல்லும் அனைத்து மக்களும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், சாலையில் அபாயகரமான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஆபத்தை உணர்ந்து அதிகாரிகள் இந்த சாலைக்கு ஏற்ற வகையில் ரவுண்டானா மிக விரைவில் அமைத்து தர வேண்டும்” எனக் கோரிக்கையை முன்வைத்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *