
முன்பு பாஜக-வில் இருந்த நடிகை கவுதமி 2021 சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருந்தார். ஆனால் அப்போது, அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ராஜபாளையத்தை தரவேண்டி இருந்ததால் கடைசி நேரத்தில் கவுதமிக்கு கைவிரித்துவிட்டது பாஜக தலைமை. கவுதமி பாஜக-வை விட்டு விலக இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில் இப்போது அதிமுக-வுக்கு வந்துவிட்ட கவுதமி, மீண்டும் ராஜபாளையத்துக்காக காய்நகர்த்த ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக நடிகை கவுதமியை பாஜக அறிவித்தது. அதற்காக தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாகவே ராஜபாளையத்தில் வீடு எடுத்து குடியேறிய கவுதமி, அங்கேயே தங்கி இருந்து களப்பணியில் கவனம் செலுத்தினார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வேட்பாளர் போல தொகுதி முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்து வந்தார்.