
இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்கும் கிட்டத்தட்ட 2,500 கி.மீ தூரம்; இடையில் ஒரு நாடு…
இந்தியாவிற்கு ஈரானுக்கும் கிட்டத்தட்ட 4,000 கி.மீ தூரம்; இடையில் நான்கு நாடுகள்!
இருந்தாலும், இந்த இரு நாடுகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால், அது கட்டாயம் இந்தியாவைப் பாதிக்கும். காரணம், இந்த இரு நாடுகளுக்குமே இந்தியா உடன் நல்ல உறவு உண்டு.
இஸ்ரேல் Vs ஈரான்
‘ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்’ என்று கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இதை ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று குறிப்பிட்டது.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரு பக்கங்களிலும் உயிர் சேதம், பொருள் சேதம் என இரண்டும் பெரிதாக இருந்தாலும், இரு நாடுகளுமே இப்போதைக்கு தாக்குதலை விட்டுவிட தயாராக இல்லை.
ஏற்கெனவே ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் உலகில் நடந்துகொண்டிருக்கும் சூழலில், இது மூன்றாவது போராக மாறுமோ என்ற அச்சம் உலக நாடுகளின் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?
பொதுவாகவே, உலகில் இரு நாடுகளுக்கு இடையே பிரச்னை நடந்தால் மற்ற நாடுகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கு வரலாறு முழுவதும் ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உண்டு. இந்தத் தாக்குதல்களிலும் பிற உலக நாடுகளுக்கும் பிரச்னை உண்டு.
அப்படி பார்க்கையில், இஸ்ரேல் – ஈரான் மோதலில், இந்தியாவிற்கும் பாதிப்புகள் என்பதை விட, மிகுந்த பாதிப்புகள் உண்டு. காரணம், இந்தியாவிற்கு இஸ்ரேல், ஈரான் என இரு நாடுகள் உடனேயும் நல்ல உறவுகள் உண்டு.
இந்தியா – இஸ்ரேல் நட்பு
இந்தியா பல ராணுவ தளவாடங்களை இஸ்ரேலில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூர், அதன் பிறகான பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதலுக்கு இந்தியா பயன்படுத்திய சில டிரோன்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டவை தான்.
ராணுவ தளவாடங்களைத் தாண்டி தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு தொடங்கி விண்வெளி வரை இந்தியா – இஸ்ரேலுக்கு உறவு உண்டு.

இந்தியா – ஈரான் உறவு
இன்னொரு பக்கம், இந்தியா – ஈரானை எடுத்துகொண்டால், அங்கேயும் இரு நாடுகளுக்கு நல்ல நட்பு உண்டு. ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை இந்தியா தான் இயக்கி வருகிறது. இந்தியா ஐரோப்பிய நாடுகளுடன் வணிகம் மேற்கொள்வதில் இந்தத் துறைமுகம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
ஒரு காலத்தில், இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஈரான் டாப் இடத்தை பிடித்திருந்தது. ஆனால், அணு ஆயுத தயாரிப்பு, தீவிரவாதம், மனித உரிமை மீறல்கள் போன்றவை ஈரானில் நடக்கிறது என்று அமெரிக்கா பல்வேறு கெடுபிடிகளை விதித்தது. இதில் இருந்து தப்பிக்க, இந்தியா 2018 – 19 காலக்கட்டத்தில், ஈரானில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டது.
இருந்தாலும் இரு நாடுகளுக்கு இடையேயும் ஓரளவிற்கு நல்ல உறவு இருந்துகொண்டு தான் வருகிறது.
இந்த நிலையில் தான், இஸ்ரேல் – ஈரானுக்கு இடையே தாக்குதல்கள் தொடங்கி உள்ளது.
என்னென்ன பாதிப்புகள்?
இந்தியாவின் கடல்வழி வணிகப் பாதைகளில் மிக முக்கியமானது செங்கடல் மற்றும் ஹார்முஸ். இந்தியாவிற்கு இறக்குமதி ஆகும் கச்சா எண்ணெய்கள் இந்த இரு பாதைகளைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தும்.
செங்கடலின் கிழக்கே ஏமன் உள்ளது. ஹார்முஸின் வடக்கே ஈரான் உள்ளது. ஏமனின் உள்ளே ஹவுத்தி படை ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்லில் களமிறங்கி உள்ளது.
ஈரான் ஹார்முஸ் பாதையை அடைக்கக் கூட வாய்ப்புகள் உண்டு. அதனால், இந்தப் பகுதிகள் தாக்குதல் மற்றும் பதற்றம் தொடரும்போது, இந்தப் பாதையில் நடக்கும் வணிகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்… ஒருவேளை தடைக் கூட ஏற்படலாம்.

இதை தவிர்க்க, இந்தியா ஆப்பிரிக்காவை சுற்றி இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்கொண்டால், இப்போது ஆகும் கால நேரத்தை விட 15 – 20 நாள்கள் அதிகம் ஆகும். அதற்கேற்ற மாதிரி செலவும் அதிகம் ஆகும்.
இவை அதிக ஆகும்போது, தானாக பொருள்களின் விலையும், பணவீக்கமும் அதிகமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.
கச்சா எண்ணெய்கள் மட்டுமல்ல, இந்தியா ஹார்முஸ் வழியாக எல்.என்.ஜியையும் இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தங்கம் விலை எப்படி இருக்கும்?
இஸ்ரேல் ஒரு தாக்குதலில் ஈடுபடுகிறது என்றால், அதில் எப்படியாவது அமெரிக்கா வந்துவிடும். கூடவே, உலகில் சூழல் சரியில்லாதப் போது பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு, தங்கம் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எதிர்வரும் விளைவுகளால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று ஆட்டம் காணத் தொடங்கி உள்ளது.
ஏற்றுமதி என்ன ஆகும்?
பாஸ்மதி அரசி, இன்ஜினீயர் பொருள்கள் போன்றவற்றை ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா இந்த வழியாகத் தான் ஏற்றுமதி செய்கிறது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். ஏற்கெனவே, இது குறித்து பஞ்சாப் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைய தொடங்கியுள்ளனர்.

ஆப்பிரிக்கா பாதையை இந்தியா தேர்ந்தெடுத்தால், செலவு அதிகம் ஆவதோடு, லாபம் குறையும். அதனால், இந்தியா இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
இறக்குமதி பொருள்களின் விலையை குறைப்பதிலும், பணவீக்கம் அதிகரிப்பதைத் தடுக்கவும் இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியா யார் பக்கம்?
மேலே குறிப்பிட்டவைகளை எல்லாம் வைத்து பார்க்கும்போது, இந்தியா எந்த நாட்டிற்கு ஆதரவான நிலைபாடு எடுத்தாலும், அது பாதிப்பை சந்திக்கும் என்பது தெரிந்திருக்கும். ஈரானுக்கு ஆதரவாக இந்தியா பேசினால் இஸ்ரேல் இந்தியா மீது வணிக ரீதியாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுத்தால் ஹர்முஸை வைத்து இந்திய வணிகத்திற்கு ஈரான் நெருக்கடி கொடுக்கும். அதனால், பெரும்பாலும் இந்தியா நடுநிலையாகத் தான் தொடரும்.
அடுத்து இந்தியா என்ன செய்ய வேண்டும்?
இந்தியா இந்த வணிகப் பாதையைத் தாண்டி, செலவு குறைவான மற்றும் விரைவான பாதையை பார்க்க வேண்டும்.
கடல் பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால், கடற்கொள்ளை நடக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால், அதற்கேற்ற தற்காப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும்.
ஒருவேளை, இந்தத் தாக்குதல்கள் போராக மாறாமல் அப்படியே நின்றுவிட்டால், இந்தியாவிற்கு மட்டும் அல்ல… உலத்திற்கே நல்லது!