
2007-ம் ஆண்டு அமீர் கான் இயக்கி நடித்த படம் ‘தாரே ஜமீன் பர்’. ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் அமீர்கானுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. இந்தப் படம் ஆஸ்கர் விருது போட்டி வரை சென்றது. தற்போது இந்த படம் வெளியாகி 18 வருடங்கள் கழிந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லும் விதமாக ‘சிதாரே ஜமீன் பர்’ என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்தப்படத்தை இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன் அடிப்படையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமீர் கான் பேட்டியளித்திருந்தார்.
அதில், “ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பஹல்காம் தாக்குதல் கொடூரமானது. அவர்கள் நம் நாட்டிற்குள் நுழைந்து சாதாரண மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர்களின் கோழைத்தனத்தை மட்டுமே காட்டுகிறது. நீங்களோ நானோ கூட அங்கு இருந்திருக்கலாம். நான் சமூக ஊடகங்களில் இல்லை. ஆனால் மக்கள் உடனடியாக இந்த சம்பவத்துக்கு எதிர்வினையாற்றுகிறார்கள்.
கோபமும் வலியும்..!
இந்த தாக்குதல் நடந்தப் பிறகு நான் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது கூட, இந்த தாக்குதல் நம் நாட்டின் மீது மட்டுமல்ல, நமது ஒற்றுமையின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் போன்று ஏற்கெனவே நம்மிடமிருந்து பதிலடிகளை பெற்றிருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டு பேசினேன். ஒவ்வொரு இந்தியரையும் போலவே, என் இதயத்திலும் நிறைய கோபமும் வலியும் இருந்தது.
உண்மையில், நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன். பல நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எனது தேசபக்தி எனது படைப்புகளில் பிரதிபலிக்கிறது. ரங் தே பசந்தி, லகான், சர்பரோஷ் ஆகியவற்றைப் பாருங்கள். வேறு எந்த நடிகரும் என்னை விட அதிக தேசபக்தி படங்களை செய்ததாக நான் நினைக்கவில்லை. எந்த மதமும் மக்களைக் கொல்லச் சொல்லவில்லை.
தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்களே இல்லை. பயங்கரவாதிகளை நான் முஸ்லிம்களாகக் கருதவில்லை. எந்த அப்பாவி மனிதனை, ஒரு பெண்ணையோ குழந்தையையோ போரில் கூட தாக்கக்கூடாது என்று இஸ்லாத்தில் எழுதப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் செயல் மூலம் அவர்கள் மதத்திற்கு எதிராகச் செல்கிறார்கள்.” என்றார்.