• June 16, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி கிராமத்தில் திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. அப்பகுதி விவசாயிகளிடம் அந்த ஆலை கரும்பு கொள்முதல் செய்தது.

கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு, ஆலை நிர்வாகம் பல கோடி நிலுவைத் தொகை வைத்துள்ளனர். மேலும், விவசாயிகள் பெயரில் விவசாயிகளுக்கு தெரியாமல் ஆலை நிர்வாகம் வங்கிகளில் பல கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது விவசாயிகளுக்கு தெரிந்த பிறகு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய கரும்பு விவசாயி

இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி ஆலையை திடீரென மூடிவிட்டது நிர்வாகம். இதையடுத்து, அரவைக்கு கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு சுமார் ரூ.100 கோடி நிலுவை தொகை வழங்காமல் ஆலை நிர்வாகம் ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

அத்துடன் விவசாயிகள் பெயரில் ரூ.300 கோடி ஆலை கடன் வாங்கியுள்ளது. வங்கி நிர்வாகம் கடனை கேட்டு விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதைதொடர்ந்து கரும்பு நிலுவை தொகையை பெற்றுத்தரவும், ஆலை வாங்கிய கடனுக்கு உரிய நீதியை பெற்றுத்தரவும் அரசை வலியுறுத்தி திருமண்டங்குடியில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தனர்.

ஆனால் இது குறித்து அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தஞ்சாவூர் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சிலரிடம் பேசினோம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை, விவசாயிகளுக்கு தெரியாமல் விவசாயிகள் நிலத்தை காட்டி வங்கிகளில் சுமார் ரூ.300 கோடி வரை கடன் வாங்கி விட்டனர். ஒரு கட்டத்தில் ஆலை நிர்வாகம், ஆலையை மூடி விட்டது. கரும்பு விவசாயிகளை ஏமாற்றிய ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், தங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை வட்டியுடன் பெற்றுத்தர கோரி கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராடி வருகின்றனர்.

ஸ்டாலின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயி

கிட்டதட்ட, 900 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அமைச்சர் உள்ளிட்ட யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. அரசு இப்பிரச்னையில் அக்கறை காட்டாமல் அலட்சியம் செய்வதாக பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் புலம்பி வந்தனர்.

இந்த நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தஞ்சை வந்த முதல்வர் ஸ்டாலினை சந்திக்க கரும்பு விவசாயிகள் அனுமதி கேட்டதாகவும் ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தை கடந்து வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அப்போது தனியார் மருத்துவமனை அருகே மறைந்திருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் ஸ்டாலின், கான்வாய் வருவதற்கு முன்பு கருப்பு கொடி காட்டி கோஷமிட்டு சாலையில் ஓடி வந்து ஸ்டாலினுக்கு எதிராக கோஷ மிட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கருப்பு கொடி போராட்டம்

உடனே அங்கிருந்த போலீஸார் அந்த விவசாயிகளை தடுத்து, கருப்பு கொடிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் சென்ற வாகனம் அந்த இடத்தை கடந்து சென்ற பிறகு கைது செய்யப்பட்ட விவசாயிகளை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸாருக்கு எதிராகவும் விவசாயிகள் கோஷமிட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *