• June 16, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநிலத்தில் கடந்தமாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடந்து கேரளா முழுவதும் மழை பெய்துவருகிறது.

கர்நாடகா, ஆந்திரா, ஒடிஷா கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சி மண்டலம் காரணமாக இன்னும் மூன்று நாள்களுக்கு கேரளாவில் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மழை

திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையைத் தொடர்ந்து காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புறம், திருச்சூர், பாலக்காடு, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன. அதிலும் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு தாலுகாவுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எருமேலி செறுவள்ளி எஸ்டேட் அருகே மரம் முறிந்து பைக்கில் சென்ற தோட்டத்தொழிலாளி முனியசாமி (56) மீது விழுந்தது. இதில் அவர் மரணமடைந்தார்.

ஆலப்புழாவில் கார் கால்வாயில் கவிழ்ந்ததில் தத்தம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிஜோய் ஆன்றணி(32) தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தார்.

கோந்நி பகுதியில் ஓடையில்  பைக் விழுந்த விபத்தில் அதிருங்காலை பகுதியைச் சேர்ந்த பிரவீன் சேகர்(47) மரணமடைந்தார்.

கண்ணூர் அழிக்கோடு பகுதியில் குளத்தில் குளிப்பதற்கு இறங்கிய இஸ்மாயில்(21) என்பவர் தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தார். இதையடுத்து நேற்று ஒரே நாளில் 4 பேர் மரணமடைந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

கேரளா மழையில் இறந்தவர்கள்

கோழிக்கோடு சாத்தமங்கலம் பகுதியில் மாதவன் நாயர்(81) என்பவர் ஆற்றில் இறங்கியபோது காணாமல் போனார். ஆலப்புழாவில் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட கொட்டாரச்சிறை பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் டான் ஜோசப் (15) காணாமல்போனார். காணாமல்போன இருவரையும் தேடும்பணி தொடர்ந்து வருகிறது. வரும் 19-ம் தேதி வரை கேரளாவில் பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *