• June 16, 2025
  • NewsEditor
  • 0

உபகுப்தா

பௌத்தக் கொள்கைகள் பழங்கதைகளாக ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே நின்று விட்டனவா? பௌத்த கதையின் மீள்பார்வையாக ‘உபகுப்தா’ கவிதை விட்டுச்சென்ற செய்தி இன்றைக்குப் பொருத்தப்பாடுடையதா? பொதுவாக நவீன கவிதைகள் உரக்கச் சொல்வதை விடச் சொல்லாமல் விட்டுச்செல்லும் அமைதியான இடங்களே அதிகம் பேசக்கூடியவை.

தாகூரின் உபகுப்தா கவிதையைப் பொருத்தவரை சொன்னதைவிட, சொல்லாமல் விட்டவையே முட்டித் ததும்புகின்றன.  பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோதுதான் உபகுப்தா குறித்த அறிமுகம் கிடைத்தது. அக்கவிதை குறித்து அவர் பேசும்போதே உள்ளம் மலர்வதை உணரமுடிந்தது, உடனே பற்றிக் கொண்டேன்.

உபகுப்தர் வங்கதேசத்தில் கடவுளாகயிருக்கிறார். மியான்மரில் ஷின் உபகுத்தா என்றும் கம்போடியாவில் பிரேஹ் உப்பகுத் என்றும் வணங்கப்படுகிறார்.  பௌத்த கொள்கைகளைப் பரப்பிய உபகுப்தர், பேரரசர் அசோகரை ஆன்மீகச் சிந்தனைக்கு ஆற்றுப்படுத்தியதோடு, அவர் பௌத்த சமயத்தைத் தழுவக் காரணமாகயிருந்தவர். உபகுப்தரின் குரு சாணவாசர், அவர் புத்தரின் உதவியாளரான அனந்தரிடம் சீடராக இருந்தவர்.

ரவீந்திரநாத் தாகூர்

புத்தரின் நேரடியான சீடராக இல்லையென்றாலும் அவருக்குப் பிந்தைய காலத்தில் புத்தபீடத்தின் குருமார் வரிசையில் முக்கியமான சீடராக விளங்கிய உபகுப்தரின் கதையை, தாகூர் தனது கவிதைக்குள் இரண்டு காட்சிகளாகக் காட்டுகிறார். முதலில் தாசியின் எளிமையான அழைப்பினை மறுப்பதையும், அடுத்து அவளைக் கருணையோடு அரவணைப்பதையும் சொல்லும் எளிமையான காட்சிகள்.

அப்படித்தான் உபகுப்தரும் நம் மனத்துக்குள் ஒருநாள் தோன்றுவார். ஒருவர் இளமையோடும் செல்வத்தோடும் இருக்கும்போது மட்டும் வெளிப்படுவதா மனிதநேயம்?  அழகு குலைந்து ஒருத்தி மரணத்தருவாயில் இருக்கும்போதும் வெளிப்படுவதைச் சொல்கிறது ‘உபகுப்தா’

தாசியின் மனிதநேயம்

நடந்து ஓய்ந்து களைத்து மதுரா நகரத்தின் வெளிச்சுவரில் மரநிழலில் புழுதியோடு புழுதியாய் இரவில் உறங்கிக் கொண்டிருந்த இளந்துறவி உபகுப்தரைத் தீண்டுகிறது யௌவனத்தின் ஒரு கரம்.

மண்புழுதியில் படுக்கவேண்டியவனா நீ என்று கேட்டு தன் வீட்டின் மஞ்சத்துக்கு அழைத்துச் செல்ல அரண்மனையில் நடனமாடுபவளும் தாசியுமான பொன் நகைகள் உடலெல்லாம் ஒளிர அழைக்கிறாள்.

தன் காதலனைப் பார்க்கப் போகும் வழியில் இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. இளமையின் மதுவால் அவள் நிறைந்திருந்தாள் என்று தாகூர் விவரிக்கிறார். உபகுப்தன் அவளது அழைப்பை மறுத்துவிடுகிறான்.

ரவீந்திரநாத் தாகூர்

எனக்கு முகநூலின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் அடிக்கடி வரும். அழகிய படங்களைப் பதிவிடும்போது பார்வைகள் கூடுகின்றன. அதுவே கட்டுரைக்கும் கவிதைக்கும் விருப்பக்குறியிடுவோர் எண்ணிக்கைக் குறைந்துவிடும்.

இதனால் படங்களை அதிகம் பகிருங்களென முகநூலும், இண்ட்ஸ்டாவும் நம்மைத் தூண்டுகின்றன. வெறும் படமாகப் பகிர்ந்தால் மட்டும் போதாது ஒவ்வொரு கணத்தின் அசைவுகளையும் உணர்வுகளையும் ‘ஸ்னாப் சாட்’ டில் போட சொல்லி சமூக ஊடகங்கள் கெஞ்சுகின்றன. அவை இழுக்கும் இழுப்புக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். இருந்தாலும், நமது வாழ்க்கையில் சில நிமிடங்கள், சில சந்திப்புகள், எதிர்பாராத சில கணங்கள் இவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்று “உபகுப்தா” கவிதை நினைவூட்டுகிறது.

கருணையுள்ள ஆன்மா

இதில் கவிதையும் காட்சிகளும் ஒரே தளத்தில் இயங்குகின்றன. இரவின் ஒளி, வீதியின் அமைதி அனைத்தும் நம் அகத்தைப் பிரதிபலிக்கின்றன. தூசியில் கிடக்கும் உருவமும் அதைச் சுற்றியுள்ள உலகமும், இரவின் பிரதிபலிப்பாக இயல்பாகச் செய்திருக்கிறார்.

 முதலில் அவள் அழகின் திலகம். நகரம் அவளின் நடனத்தைக் கண்டு மயங்குகிறது. மதுரா நகரின் சுவர்களின் நிழலில், உபகுப்தன் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த இரவு எளிதானதல்ல. அரண்மனையின் கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன. நகரம் ஒட்டுமொத்தமாக மௌனத்தில் மூழ்கியிருக்கிறது.

ரவீந்திரநாத் தாகூர்

தாசி தயவுகூர்ந்து உபகுப்தனை அழைத்தபோது அவன் சொல்லும் சொல்தான் இந்தக் கவிதையின் சாவி.

“எனக்கான நேரம் இன்னும் வரவில்லை. தயவுசெய்து உன் வழியில் போ. சரியான நேரத்தில், நானே உன்னிடத்தில் வருவேன்.” என்று உபகுப்தன் அன்பான வார்த்தைகளால் பதில் சொல்கிறான். பயங்கரமான காற்று வீச, மின்னல் வெட்டிச்செல்லும் காட்சியை, வானம் புன்னகையைக் கிழிக்கிறது என்கிறார் தாகூர்.

 இங்கே முதல் காட்சி முடிகிறது. இரண்டாவது காட்சி அடுத்த முனைக்குச் செல்கிறது. ஓர் அந்தி சாயும் நேரம், இளங்காற்று அமைதியின்மையின்றி அசைகிறது; பாதையிலிருந்த மரங்கள் மொட்டுகளால் நிரம்பி வழிகின்றன. மன்னரின் தோட்டத்தில் மகிழம்பூக்களும், பாரி ஜாதப் பூக்களும், சம்பங்கிப் பூக்களும் மலர்ந்து சிரிக்கின்றன. தூரத்திலிருந்து, பூக்களின் வாசனைக் காற்றில் மிதந்து வ்ரும் புல்லாங்குழலின் மயக்கும் இசைபோல் வருகிறது. அனைவரும் தேன் நிறைந்த காடுகளில் பூக்களின் திருவிழாவிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதால் நகரம் அமைதியாகயிருக்கிறது.  முழுநிலவு நகரத்தைப் பார்த்துச் சிரிக்க, நிலவொளி வீசும் பாதையில் தனியாக உபகுப்தர் நடந்து வருகிறார்.  

பல நாள்களுக்குப் பிறகு, அந்த இடத்தைத் தேடி வருகிறார். நகரத்தின் சுவர்களைத் தாண்டி, அகழியின் அருகே நிற்கிறார். அங்குள்ள மரத்தின் நிழலில், இளம்பெண் காலடிக்கருகில் படுத்திருப்பதைக் கண்டு அருகில் செல்கிறார். அவள் உடல் அம்மைப்  புண்களால் கொப்புளமாகயிருந்தது கொடிய நோயால் பாதிக்கப்பட்டது போலிருந்தாள். உடல் கறுத்திருந்தது.

துறவி அவளருகில் சென்றமர்கிறார். அவளது தலையைத்தூக்கி அவரது மடியில் வைக்கிறார். வெடித்த உதடுகளில் தண்ணீரை ஊற்றி, அவள் தலையில் கை வைத்து ஏதோ மந்திரத்தை உச்சரிக்கிறார், இலை, கிளைகளின் கீழ் அமர்ந்து காகங்கள் கூச்சலிட்டன.  இரவு நிலவொளியால் நிறைந்திருந்தது. அவள் உடலில் சந்தனத்தைப் பூசும்போது, மகிழம்பூக்கள் உதிர்ந்து கொண்டிருந்தன என்கிறார் தாகூர்.

ரவீந்திரநாத் தாகூர்

அழகு என்பது..

“கருணையுள்ள ஆன்மாவே, நீ யார்?” என அந்தப் பெண் கேட்டாள்.

“உன்னிடம் வரவேண்டிய நேரம். வந்திருக்கிறேன்” என்று உபகுப்தா சொல்கிறார். இவை அனைத்தும் ஒரு காட்சி படிமமாக நம் உடலை அதிரவைக்கிறது. தாகூரின் வரிகளுக்குப் பின்னால் நிறைந்திருக்கும் காட்சிகளின் அவதானிப்பு இக்கவிதைக்கு இன்னும் அழகூட்டுகிறது.

செல்வம், செருக்கு, அழகின் நிலையாமையின் உருவகமாக நோயுற்ற தாசியைப் படைத்துள்ளார் தாகூர்.

இன்றைய உலகில் உபகுப்தர்கள் இருக்கலாம், தன்னைப் புத்தராகவும், சீடராகவும் நினைத்துக்கொள்ளலாம். இக்கதையை வெறும் தொன்மமாக விட்டுவிடாமல் நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவமாக அவதானிக்கலாம். ஒருவருக்குத் தேவையான நேரத்தில் அருகிலிருப்பது பொறுப்பும், மனித உணர்வும்  நிறைந்தது.  வீழும் தருணத்தில் அருகிலிருப்பதுதான் அன்பு என்ற ஒற்றை வரிதான் தாகூரின் செய்தி. அழகு என்பது தேவைப்படும் நேரத்தில் அருகிலிருக்கும் தருணம், அதுவே நெருக்கத்தை உண்டாக்குகிறது. அழகு என்பது விரிந்துகொண்டிருக்கும் மலரல்ல; வாடிய மலர் வீழ்ந்தபோதும் நின்றுகொண்டு கைப்பிடித்து அருகில் அமர்வது தானே.

தாகூரும் கவிதையைத் துறவு போல் எண்ணியிருக்கக்கூடும். அழகியலும் குறியீடுகளுமாகப் படைப்புகளைச் சித்தரித்து  ஞானத்தின் உச்சத்தை எட்டும் மகத்துவத்தை எட்டியிருக்கிறார்.

துறவு 

இன்னொரு கோணத்தில் உபகுப்தா கவிதை நேரடியாக என்னை ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தனிடம் அழைத்துச்சென்றது. திருலோக சீதாரம் மொழிபெயர்ப்பில் சிறுவயதில் அர்த்தம் புரிந்தும் புரியாமலும் படித்தாலும் பிறகான மீள்வாசிப்பில் சித்தார்த்தனை உள்வாங்க முடிந்தது.

துறவியாகப் புறப்பட்டவன் ஞானம் பெற ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்கிறான். எத்தனையோ சமணத் துறவிகள் ஞானிகளின் போதனைகளைக் கேட்டவனுக்குப் பதில்கள் திருப்தியைத் தரவில்லை. சுயதேடலில் பயணித்தபடி இருக்கிறான். அங்கும் தாசியும் நடனமணியுமான கமலா குறுக்கிட்டு அவனுக்கு உலகவாழ்வின் இன்பங்களைத் தெவிட்டுமளவுக்கு அளிக்கிறாள்.

ஒரு கட்டத்தில் மதுவிலும் போகத்திலும் பாதை தப்பிவிட்டதை உணர்ந்து கமலாவை விலகி மீண்டும் தன் மெய்மைப் பயணத்தைத் தொடர்கிறான். கமலாவுக்கே இறுதிக்கடன் செய்யும் நிலை வருகிறது. கமலாவுடன் கூடிப் பெற்றெடுத்த மகனால் மீண்டும் பந்தத்தின் கயிற்றில் சிக்குகிறான்.

தாகூரின் உபகுப்தனோ சித்தார்த்தனைப் போலன்றி ஆரம்பத்திலேயே தாசியைத் தவிர்த்துவிடுகிறான். ஆனால், தாசியின் இறுதிநாளில் அவளை வழியனுப்ப வந்துசேர்கிறான். இரண்டு படைப்புகளிலும் துறவு மறுத்தலும் இருத்தலுமாக முரண்பட்டு நிற்கிறது.

ரவீந்திரநாத் தாகூரின் இமயமலை பயணம்

ரவீந்திரநாத் தாகூர்  பனிரெண்டு வயதாக இருந்தபோது, அவரது தந்தை நான்கு மாத பயணமாக இமயமலைக்கு அழைத்துச் சென்றார்.

“நான் வீட்டை விட்டு வெளியேறும்போது என்னைக் கட்டிப்போட்ட சங்கிலிகள் நிரந்தரமாக அறுந்து போயின,” என்று குறிப்பிடுகிறார்.

தனது பதின்மூன்று வயதில் முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டார். இருபதாம் நூற்றாண்டில் வங்காள மறுமலர்ச்சி இயக்கத்தின் நீட்சியாக விளங்கிய ரவீந்திரநாத் தாகூர், கவிஞர், பாடலாசிரியர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இசை வல்லுநர், நாடக ஆசிரியர், ஓவியர், கல்வியாளர், தேசபக்தர், சர்வதேசவாதி, மனிதநேயர், தீர்க்கதரிசி, வழிகாட்டி, தத்துவஞானி என்கிற வகைகளில் இந்தியாவின் முன்னணிக் கவிஞராக அறியப்படுகிறார். தனது பன்முகத்தன்மையின் மூலம், அப்போது விடுதலைக்குப் போராடிவந்த இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதற்குமே பல்வேறு வழிகளில் தனது கருத்துகளை வழங்கிக்கொண்டே இருந்தார்.

முறையற்றத் தொடர்பினைச் சொல்லும் கதையாகயிருப்பினும் சாருவின் முகபாவங்கள் காட்டும் உணர்வுகளுக்குச் சொற்களில்லை. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி சாருலதா ஊஞ்சலில் ஆடுவது, கொஞ்ச நேரம் ஊஞ்சலாடும், கொஞ்ச நேரம் தரை ஆடும். தேக்கு மர ஊஞ்சலை நான் வீட்டிற்குள் கொண்டு வர முடியாமல் பிரித்து, நுழைத்து, கோர்த்து, அமர்ந்து ஆடும்போது தான் தோட்டத்திலாடும் ஊஞ்சலின் சுகம் கூடியது.

ரவீந்திரநாத் தாகூர்

பழைய காதல் கதைகளை நான் கேட்கும்போதெல்லாம், அதன் பழமையான வலியும் பிரிவும் என்னைத் துரத்துகின்றன. காதலில் நீயும் நானும் ஊற்றிலிருந்து வரும் ஓடையில் மிதந்தோம். இதயங்களைப் பரிமாறி ஒருவருக்கொருவர் அன்பு செய்தோம் என்று சொல்கிறது

‘எல்லையற்ற காதல்’

இன்று உனது காலடியில் வீழ்ந்து கிடக்கிறது,

அது உன்னைக் கண்டறிந்து உன்னிலே முடிகிறது

எல்லோரிடமும் எல்லா நாட்களிலும் காதல் இருந்துகொண்டுதானிருக்கிறது

நேற்றும் இன்றும் என்றென்றும்

உலகளாவிய மகிழ்ச்சி, உலகளாவிய துக்கம்,

உலகளாவிய வாழ்வு

அனைத்து நினைவுகளும்

அனைத்துக் காதல்களும் ஒன்றிணைந்து

நம்முடைய ஒரே காதலாகிறது

ஒவ்வொரு கவிஞனின் பாடல்களுடன்

நேற்றும் இன்றும் என்றென்றும்.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பிற்கும் தொடர்பிற்கும் பங்களிப்புகளைச் செய்த சிறந்த கவிஞர், தத்துவஞானியாகச் சீனர்களால் மதிக்கப்படுகிறார். ஒருமுறை சீனா சென்றிருந்தபோது, “எனது பிறந்தநாளில்” என்ற தலைப்பில் தனது மரணத்திற்குச் சில மாதங்களுக்கு முன்பு எண்பதாவது வயதில் இக்கவிதையை எழுதியிருக்கிறார்.

ரவீந்திரநாத் தாகூர்

“என்னைச் சந்திக்க இயலாதவர்கள்

தங்களது நட்பினை எனது நெற்றியில்

திலகமாக வைத்து

என்னை அவர்களின் சொந்தமெனக்

கொண்டாடுகிறார்கள்”

இந்தியா, வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளுக்கு தேசியகீதத்தை வழங்கிய ஒரே கவிஞர் என்ற புகழும் உண்டு. கீதாஞ்சலிக்கு நோபல் பரிசு பெற்ற பிறகும் கூட இறுதிவரை எழுதிவந்தவர். காந்திக்கு மகாத்மா என்ற பெயரைச் சூட்டியவர். சாந்தி நிகேதனில் இறுதிக் காலத்தைச் செலவிட்டு, தனது சொந்த வீட்டில் 1941 ஆம் ஆண்டு 80 வயதில் மறைந்தார்.

தாகூர் நோபல் பரிசை வாங்குவதற்கு கீதாஞ்சலிக்கு முன்னுரை எழுதிய டபிள்யூ.பி.யேட்ஸின் அறிமுகம் முக்கியக் காரணியாக இருந்தது. அவநம்பிக்கை, விரக்தி, கசப்பை உட்கொண்டு நவீனத்துவத்தை நோக்கி உலக இலக்கியம் சென்ற காலத்தில் தாகூர் கீதாஞ்சலி என்ற காதலையும் இயற்கையையும் பாடியது காயப்பட்ட உலகத்துக்கு நம்பிக்கைக்கான மருந்தாகத் தெரிந்தது.

 //ஓ முட்டாளே, உன்னையே உன் தோள்களில் சுமக்கிறாயே!

ஓ பிச்சைக்காரனே, உன் வீட்டு வாசலில் நீயே பிச்சையெடுக்கிறாயே!//

 //கிராமத்தின் வழியாக வீடு வீடாகப் பிச்சைக் கேட்டு நடந்தேன்

அப்போது நீ தங்கத் தேரில் உன்னதமான கனவுபோல் எதிரில் வந்தாய்.//

 //இந்த ஜபங்களையும், பஜனைகளையும், பூமாலைகளையும் விட்டுவிடு!

இந்த இருட்டான கோவிலின் மூடிய மூலையில், யாரை வணங்குகிறாய்?

உன் கண்களைத் திற, உன் கடவுள் உன் முன்னால் இல்லை!//

 //நான் காதலுக்காக மட்டுமே காத்திருக்கிறேன்;

இறுதியில் என்னை அவன் கைகளில் முழுமையாக ஒப்படைக்க

நான் தயாராக இருக்கிறேன்

அதனால் தான் இவ்வளவு தாமதம்

ஏன் இதுபோன்ற தவறுகளைச் செய்கிறேன்?//

 //எனது ஆசைகளோ அதிகம் எனது அழுகையோ துயரமானது//

 //ஓ, கடவுளே! உன்னதக் கவிஞனே!//

ரவீந்திரநாத் தாகூர்

கீதாஞ்சலியைப் பலரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.  இது 35-வது பாடல் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் மொழிபெயர்ப்பு.

எங்கே மனம் அச்சமின்றித் தரிக்கிறதோ

எங்கே சிரம் உயர்ந்து நிற்கிறதோ

எங்கே அறிவு சுதந்திரமாக உலவுகிறதோ

குறுகிய உள்விவகாரச் சுவர்களால்

துண்டுகளாக உடையாமல் உலகம் எங்கே திகழ்கிறதோ

சத்தியத்தின் ஆழத்திலிருந்து எங்கே சொற்கள் வருகின்றனவோ

களைப்புறாத முயற்சி, தனது புஜங்களை

பரிபூரணத்தை நோக்கி எங்கே விரிக்கிறதோ

செத்த பழக்கத்தின் அசமந்தப் பாலை மணலில்

பகுத்தறிவின் தெள்ளிய ஓடை

எங்கே தன் வழியைத் தொலைக்காமல் பாய்கிறதோ

எப்போதும் விரியும் சிந்தனை, செயலுடன்

உன்னை

உன் மனம் எங்கே வழிநடத்துகிறதோ

விடுதலையின் அந்தச் சொர்க்கத்துக்குள்

என் தேசம் விழிக்கட்டும்

தந்தையே.

#சொற்கள் மிதக்கும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *