
ஜூன் 13 அன்று, இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானில் உள்ள நடான்ஸ், கோண்டாப், கோர்ராமாபாத்தில் உள்ள அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள், ஏவுகணை உற்பத்தி தளங்கள் ஆகிய170 க்கும் மேற்பட்ட இடங்கள், 720 இராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை இலக்காகக் கொண்டு இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஒரே இரவில் தீவிரமடைந்தது.
தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இரு நாடுகளின் தலைவர்களும் பதிலடிகள் தொடரும் என்று பேசி வருகிறார்கள். இந்தத் தாக்குதலில் இதுவரை, உயர் அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட 14 மூத்த ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தெஹ்ரான் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 60 பொதுமக்கள் இறந்ததாக ஈரானிய அரசு தெரிவித்திருக்கிறது. அதே நேரம் ஈரான் இஸ்ரேலை குறிவைத்து சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 100 ட்ரோன்கள் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது.
இதில் குறைந்தது 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருநாடுகளுக்கும் மத்தியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தன் சமூக ஊடக பக்கத்தில்,
“நான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் (ஒரு ஒப்பந்தம்) செய்ய வைத்தது போல, ஈரானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். விரைவாக ஒரு முடிவை எடுத்து, போரை நிறுத்த இரண்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம்.

சில முட்டாள்தனமான முடிவுகளால் பைடன் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நான் அதை மீண்டும் சரிசெய்வேன். நைல் நதியில் அணை கட்டுவது தொடர்பாக எகிப்துக்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் எனது தலையீட்டால் குறைந்தபட்சம் இப்போதைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. அது அப்படியே தொடரும்.
அதேப் போல இப்போது இஸ்ரேல் – ஈரானுக்கு இடைய பல சந்திப்புகள் நடைபெறுகின்றன. நான் நிறைய செய்கிறேன், எதற்கும் ஒருபோதும் பாராட்டு பெறுவதில்லை. ஆனால் மக்கள் புரிந்துகொள்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலை இந்தியா பாகிஸ்தான் அதிகாரிகள் தான் பேசி முடிவுக்கு கொண்டு வந்தார்கள் என இந்தியா தொடர்ந்து கூறி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார். தற்போது இஸ்ரேல் – ஈரான் மோதலை மையமாக வைத்து அதே கருத்தை மீண்டும் தெரிவித்திருக்கிறார் ட்ரம்ப்.