
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி நேற்று (15.06.25) டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா காந்தி வயிறு சம்பந்தமான பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை தொடர்ந்து பரிசோதித்து வருகிறோம் என தனியார் மருத்துவமனை தரப்பில் சொல்லப்பட்டிருப்பதாக ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஜூன் மாதத்தில் மட்டும் சோனியா காந்தி இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு தனிப்பட்ட பயணமாக தனது மகள் பிரியங்கா காந்தியுடன் சோனியா காந்தி சிம்லாவுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் சோர்வாக உணரவே உடனடியாக அவர் இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சோனியா காந்தி இரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும், அவர் வழக்கமான பரிசோதனைக்குதான் மருத்துவமனைக்கு வந்ததாகவும் அதை முடித்துவிட்டு கிளம்பிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான் வயிறு சம்பந்தமான பிரச்சனைக்காக டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.