
நாக்பூர்: சுற்றுலா நிமித்தமாக இமாச்சல் மாநிலம் மணாலிக்கு பயணித்த நாக்பூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு அந்த பயணம் மோசமானதாக அமைந்தது. மணாலியில் ஜிப்லைன் சாகசம் மேற்கொண்ட அந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, கேபிள் அறுந்த காரணத்தால் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
நாக்பூரில் வசித்து வரும் பிரஃபுல்லா பிஜ்வே தம்பதியர் மற்றும் அவர்களது 10 வயது மகள் த்ரிஷா பிஜ்வே உடன் மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடந்த 8-ம் தேதி அவர்கள் தனியார் சாகச அனுபவங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது த்ரிஷா பிஜ்வே ஜிப்லைனில் ரைட் சென்றுள்ளார். பாதி வழியில் ஜிப்லைனின் கேபிள் அறுந்த காரணத்தால் சுமார் 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து த்ரிஷா படுகாயமடைந்தார்.