
கொல்கத்தா: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான விபத்தில் விமானப் பணிப் பெண்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரைச் சேர்ந்த குகி மற்றும் மைதேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 10 பணிப்பெண்கள் இருந்துள்ளனர். அவர்களில் மணிப்பூர் மாநிலத்தின் குகி இனத்தை சேர்ந்த லாம்நந்தியம் சிங்சன் மற்றும் மைதேயி இனத்தை சேர்ந்த கந்தோய் சர்மா காங்பிரெய்லாக்பம் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்களும் விமான விபத்தில் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான தகவல் அறிந்ததும் இவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். லாம்நந்தியம், கந்தோய் இருவரும் உயிரிழந்த தகவல் அறிந்தவுடன் சமூக அமைப்பினர், மணிப்பூர் மக்கள் என அனைவரும் தங்கள் இன வேறுபாட்டை மறந்து அந்தக் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். குகி – மைதேயி இனங்களை மறந்து அரசியல் கட்சியினரும் குடிமக்களும் பல்வேறு அமைப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் சோகமான இந்த நேரத்தில் 2 குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.