• June 14, 2025
  • NewsEditor
  • 0

ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் மீது ‘Chokers’ என்ற பட்டத்தை நீண்ட நாட்களாக சுமந்துகொண்டிருந்தது. ஒரு ஐ.சி.சி தொடரை வெல்ல வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு இப்போது மார்க்ரம் மற்றும் பவுமாவின் சிறப்பான பேட்டிங்கால் பலித்திருக்கிறது.

Markram

‘Chokers’ என்கிற வார்த்தை அந்த அணிக்கு எந்த விதத்திலும் மிகையானதில்லை. ஏனெனில், இதுவரைக்கும் ஐ.சி.சி தொடர்களில் மட்டும் 12 அரையிறுதிப் போட்டிகளில் தோற்றிருக்கிறார்கள். லீக் சுற்றிலெல்லாம் நன்றாக ஆடுவார்கள். நாக் அவுட் என்று வந்தவுடன் சொதப்பிவிடுவார்கள்.

இந்த இறுதிப்போட்டியில் கூட ஆஸ்திரேலிய அணிக்கு தென்னாப்பிரிக்கா அணி எப்படியும் ‘Choke’ செய்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு டார்கெட் 282. நேற்றைய நாளின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 213 ரன்களை எடுத்திருந்தது. மார்க்ரமும் பவுமாவும் 143 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். மார்க்ரம் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகிவிட்டு, இந்த இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் வலுவான பௌலிங்கை திடகாத்திரமாக எதிர்கொண்டு வந்தார். சதத்தையும் கடந்திருந்தார்.

Markram & Bavuma
Markram & Bavuma

பவுமாவும் தசைப்பிடிப்பு இருந்தாலும் மன உறுதியோடு நின்று அற்புதமாக தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்தார். ஏறக்குறைய போட்டி தென்னாப்பிரிக்காவின் கையில் வந்துவிட்டது. இந்நிலையில், நேற்றைய நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த நியூசிலாந்தின் முன்னாள் வீரர் வெட்டோரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘எங்களுக்கு இன்னும் 8 விக்கெட்டெல்லாம் தேவை இல்லை. ஒரே ஒரு விக்கெட் போதும். இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்துவிட்டால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்துவிடுவோம்.’ என்றார். அதாவது, தென்னாப்பிரிக்கா அணியை Choke ஆக வைப்போம் என்பதை வேறு வேறு வார்த்தைகளில் கூறினார்.

வெட்டோரியின் நம்பிக்கை பலிக்கவில்லை. வெட்டோரியும் ஆஸ்திரேலியாவும் நினைத்த அந்த ஒரு விக்கெட் கிடைத்தது. பவுமா இன்றைய நாளின் தொடக்கத்திலேயே கம்மின்ஸின் பந்தில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. தென்னாப்பிரிக்கா சரிந்து விழும் என நினைத்தனர். ஆனால், மார்க்ரம் அசரவில்லை. நேற்று எப்படி நின்று ஆடினாரோ அப்படியேத்தான் இன்றும் ஆடினார்.

ஆஸி பௌலர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்னும் 6 ரன்கள் தேவை எனும் சூழலில் 136 ரன்களில் ஹேசல்வுட்டின் பந்தில் அவுட் ஆனார். தென்னாப்பிரிக்கா Choke என நினைத்தார்களே. அதை முறியடித்துவிட்டுதான் மார்க்ரம் பெவிலியனுக்கு சென்றார். தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ரபாடா, யான்சென், இங்கிடி, பவுமா, மார்க்ரம் ஆகியோர் சிறப்பாக ஆடி தென்னாப்பிரிக்காவின் துயர வரலாற்றை மாற்றி எழுதியிருக்கின்றனர். இனியும் அவர்களை Chokers என சொல்ல முடியாது. அவர்கள் இனி சாம்பியன்ஸ்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *