• June 14, 2025
  • NewsEditor
  • 0

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது அந்த விமானம் விழுந்து வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.

விமான விபத்து

இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 274 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அந்த விமானத்துடன் தொடர்புடைய பலரின் செய்திகள் சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பூமி சௌஹான் உயிர் பிழைத்த சம்பவம்.

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில்,“எனது கணவருடன் இங்கிலாந்தின் பிரிஸ்டலில் வசித்துவருகிறேன். வணிக நிர்வாகம் படித்து வரும் நான், விடுமுறையை கொண்டாட இந்தியாவுக்கு வந்திருந்தேன். விபத்து அன்று, அவசர அவசரமாக விமான நிலையத்துக்கு வந்துகொண்டிருந்தோம். எங்கள் டிரைவரிடமும் கோபமாக பேசிக்கொண்டே வந்தோம். வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அப்படி முயன்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக என்னால் சரியான நேரத்துக்கு விமான நிலையத்துக்கு வரமுடியவில்லை.

 பூமி சௌஹான்
பூமி சௌஹான்

எங்களிடம் விமான நிலைய அதிகாரிகள் விமானம் புறப்பட்ட தயாராகிவிட்டதாக தெரிவித்து, திரும்பி அனுப்பினார்கள். பெரும் விரக்தியுடன் விமான நிலையத்தில் இருந்த தேநீர் கடை ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டே விமான டிக்கெட் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது என்பது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்த சோகம் நிகழ்ந்தது. அந்த விமானத்தில் நான் பயணிக்காததை நினைத்து மகிழ்வதா? அல்லது இறந்தவர்களை நினைத்து வருந்துவதா எனத் தெரியவில்லை. அப்போதுதான் விமான நிலைய அதிகாரிகளிடம் கெஞ்சி கேட்டதெல்லாம் நினைவுக்கு வந்தது.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *