
புதுடெல்லி: “அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணைக்காக உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்துறைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்க மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்படும்” என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, “கடந்த இரண்டு நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. குறிப்பாக அமைச்சகத்துக்கும், மற்ற அனைவருக்கும் மிகவும் கடினமான சூழல் இருந்தது. அகமதாபாத்தில் நடந்த சம்பவம் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் என் தந்தையையும் ஒரு சாலை விபத்தில் இழந்துவிட்டேன். எனவே ஓரளவுக்கு, குடும்ப உறுப்பினர்கள் உணரும் வலியையும் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.