
மாமியார் குடும்பத்தினர் தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை வழக்கை தனித்துவமான முறையில் எதிர்கொண்டு வருகிறார் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத்.
2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பாரனில் உள்ள அன்டா பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் கிருஷ்ண குமார்.
தேனி வளர்ப்பவராக இருந்த அவர் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அவரின் நிலை தலைகீழாக மாறியிருக்கிறது. அவரது மனைவி மற்றும் மாமியார் குடும்பம் அவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சட்ட போராட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்காக அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் தனது மாமியார் வீட்டிற்கு அருகில், ஒரு தேநீர் கடையைத் திறந்து வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவியின் குடும்பத்தினர், அவரது மாமியார், இவர்மீது 498A பிரிவின் கீழ் வரதட்சணை கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை அவர் மறுத்து, அதற்கெதிராக சமூக விழிப்புணர்வு செய்யும் வகையில் , “498A டீ கஃபே” என்ற பெயரில் ஒரு தேநீர் கடையைத் தொடங்கியுள்ளார்.

இந்த முயற்சி வெறும் வணிக நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் தனக்கு நீதி வேண்டுமென்ற நோக்கிலும் இதனை செய்து வருகிறார்.
அந்த டீக்கடையில் கைவிலங்கு அணிந்து அவர் தேநீர் தயாரிப்பதுதான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, தேநீர் கொதிக்கும்” என்ற குறிப்பிடப்பட்ட வாசகம் அவரது கடையில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. தன்னைப் போலவே, நீதி கிடைக்காமல் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்கள் மற்றும் பயணச் சுமைகளில் போராடும் ஆண்களுக்கு குரல் கொடுக்கும் நோக்கிலும் இது செயல்படுகிறது.
கிருஷ்ண குமாரின் இந்த தனித்துவமான முறை, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.