
புதுக்கோட்டை மச்சுவாடி, கொட்டையக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அந்த பகுதி மற்றும் காமராஜபுரம் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் தீபாவளி பண்டு சீட்டு பிடிப்பதாக கூறி பணம் வசூல் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தீபாவளி நெருங்க நெருங்க கிருஷ்ணகுமார் என்கிற மணிகண்டன் பணம் வசூல் செய்த மக்களிடம், பணத்தை தரவில்லை. மாறாக, பணம் வேறு ஒரு இடத்தில் லாக் ஆகிவிட்டதாக கூறி மேலும் அந்த பொது மக்களிடம் வட்டியோடு பணம் தருகிறேன் என்று கூறி, மேலும் ஒவ்வொருவரிடமும் ரூ. 10,000, ரூ. 20,000, நகை என இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளார்.
அதற்கான வட்டியையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது ஆறு மாதங்களாக பணம் வசூல் செய்த பொது மக்களிடம் வட்டிப் பணமும், அசல் பணமும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டன் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தலைமறைவாகியுள்ளார்.
இதனை அறிந்த பணம் கொடுத்த பொதுமக்கள் மணிகண்டனை பிடித்து தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், மணிகண்டனின் பெற்றோர், ‘எங்கள் மகனைக் காணவில்லை’ என புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மணிகண்டன் தற்பொழுது நகர காவல் நிலையத்தில் தானாக ஆஜராகி உள்ள நிலையில், இதனை அறிந்த பணம் கொடுத்த பொதுமக்கள் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தங்களிடம் மோசடி செய்த பணத்தை வசூல் செய்து தரும்படி பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.