• June 13, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

ஆகஸ்ட் 15 என்றால் அதன் முக்கியத்துவம் நம் எல்லோருக்கும் தெரியும். அது கொரியாவின் சுதந்திர தினம் கூட என்பது பெரும்பாலும் தெரியாது. அங்கே 1991-92களில் இருந்தேன். என்னுடைய உணவு ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து UNIDO பெலோஷிப் மூலம் ஒரு மேற்படிப்புக்கு சென்றேன். 1980-களுக்கு முன்னர், கொரியாவிலிருந்து மேற்படிப்புக்கு இந்தியா வருவார்கள்.

90களில் நிலைமை மாறி, கொரியா ஸ்டைபெண்ட் கொடுத்து வளரும் நாடுகளின் மேற்கல்வி தொடர வழி செய்கிறது என்பது அந்த நாட்டின் மேம்பட்ட வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

கொரியாவும் இந்தியாவும் ஒரே காலக்கட்டத்தில் சுதந்திரம் அடைந்தது எனலாம். அவர்கள் உலகப் போர் முடிந்து, பின்னர் வட கொரியாவுடன் 1950 முதல் 3 வருட காலம் யுத்தத்தில் இருந்திருக்கிறார்கள். அது ஒரு பயங்கர யுத்தம் என்று சொல்லலாம். யுத்தம் காரணமாக சுமார் 30 லட்சம் மக்கள் இறந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு அமெரிக்கா ஒரு பெரிய கை கொடுத்தது.

அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறினார்கள் என்றால் அதற்கு மாறான கருத்து இருக்காது. யுத்த சமயத்தில் ஒருவேளை அரிசி (கொரியாவின் பிரதான உணவு ) சாதம் சாப்பிடுவது என்றால் அது மிகப் பெரிய விஷயம் என்று அங்கிருந்த என் ப்ரொபசர் சொல்லிக் கேட்டு இருக்கிறேன்.

சில்லென்று ஒரு அக்டோபர் இரவில் சியோல் நகரில் இரவு 10 மணியளவில் இறங்கியவுடன் எதோ சொர்க்கபுரி உணர்ந்தேன். நகர் முழுதும் மின்னொளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

கொரியா யூனிவெர்சிட்டில் உள்ள தங்கும் விடுதிக்கு என் புரோபேசரின் மாணவர் வரவேற்று அழைத்து சென்றார். டார்மிட்டரி ரூம். தனியாக பாத் ரூம், காஸ் அடுப்பு, பிரிட்ஜ் கூடிய சமையலறை. என்னுடன் ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பிலிபைன்ஸ், வியட்நாம், எகிப்து, சூடான் மற்றும் நைஜீரியா நாடுகளிருந்து ஒவ்வொருவர் இணைந்திருந்தார்கள்.

நம் சென்னையில் 2015ல் தான் மெட்ரோ ஆரம்பமாகியது.  1974ல் ஆரம்பிக்கப் பட்ட சியோல் மெட்ரோ லைன் நான் இருந்த காலகட்டத்தில் 4 லைன்களாக ஓடின (தற்போது 9 ).  வெளிநாட்டினரும் மிகவும் எளிதாக பயணிக்கத்  தக்க வகையில் அவை இருந்தன. 

எல்லா ஸ்டேஷனுக்கும் ஒரு நம்பர் கொடுத்திருந்தார்கள் அதனால், நாம் செல்ல வேண்டிய ஸ்டேஷன் பற்றி நம்பர் மாத்திரம் தெரிந்து கொண்டிருந்தால் போதுமானது. நான் அப்படித்தான் இலகுவாக மெட்ரோவில் பயணித்தேன். மெட்ரோ வண்டி ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நிற்கும் போதும், அந்த ஸ்டேஷனின் நம்பர் தெரியும் படி எல்லா தூண்களிலும் நம்பர் இருக்கும். அதனால், நாம் அந்த ஸ்டேஷனின் பெயர் பற்றித்  தெரிந்துக்  கொள்ள அவசியமே இல்லாமல் இருந்தது.

நம்மூரில்  வெளியூர் நபர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்  விதத்தில் ஸ்டேஷன் பெயர்கள் இருக்கின்றன. உதாரணம், சென்னை சென்ட்ரல் மிக நீளமாக புரட்சித் தலைவர் Dr. எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் என்று.

மெட்ரோவில் இரு மொழி பயன்பாட்டில் உள்ளது. அங்கு நான் பஸ்களில் பயணித்தது மிகக் குறைவு. பெரும்பாலான மெட்ரோ ஸ்டேஷன்களில் ஷாப்பிங் மால்  உண்டு. மெட்ரோ டிக்கெட்கள் சிறிய பெட்டிக்கடைகளில் 30 பர்சன்ட் தள்ளுபடியில் கூட கிடைத்தன.

அவர்களின் நாணயமுறை நம் ருபாய், பைசா போல் இருவிதமாக இல்லை. Won (₩) என்று அழைக்கப்படுகிறது. இது பைசா போன்றது. 100 Wக்கு சமனாக இன்னொரு நாணயம் இல்லை. அதனால், எல்லாவற்றிக்கும் பெரிய பெரிய எண்கள் பயன்படுத்த வேண்டிருக்கிறது.

நீங்கள் ரூபாய் இல்லை என்று கற்பனை செய்துக் கொண்டு மளிகை கடையில் பிஸ்கட் பாக்கெட் வாங்கினால், கடைக்காரர் 1000 பைசா (10 ரூபாய் ) என்பார். ஒரு நாணய ஒப்பீடு, சுமாராக,  1 US டாலர் = 750 W (1992ல் )  = 1400 W  (2025ல் ); 1 டாலர் -= Rs 25 (1992), Rs 85 (2025).

நம் எல்லோருக்கும் ஹுண்டாய் பற்றி நன்றாகத் தெரியும். நமக்குத் தெரியாதது ஒன்று என்னவென்றால் அந்தக் கொரியன் ஹுண்டாய் அமெரிக்காவின் போர்ட் கார் கம்பெனியிடமிருந்து தொழில்நுட்பம் வாங்கினார்கள். அதே காலக்கட்டத்தில் (சுமார் 1960களில் ) நம் நாட்டு அம்பாசிடர் கம்பெனியும் பிரிட்டிஷிடமிருந்து வாங்கினார்கள்.  ஆனால் இன்றைய நிலைமை ?.  அம்பாசிடர் காணாமல் போய்விட்டது. ஹுண்டாய் எல்லா நாடுகளிலும் உச்சரிக்கக் கூடிய பிராண்ட் பெயராக ஆக உள்ளது.

கொரியர்கள் ஆங்கிலம் என்றால் காத தூரம் ஓடுபவர்கள். ஆனால், படித்த  எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும். ஆங்கிலம் பேசுபவர்களை அண்ணாந்து ஆச்சரியமாக பார்க்கும் நபர்கள் தான்.  நீங்கள் அவர்களிடம் ‘என்ன நேரம் ?’ என்று ஆங்கிலத்தில் கேட்டால் அவர்கள் பதில் சொல்ல தடுமாறுவார்கள்.

ரொம்ப ஈசியாக அவர்களிடம் உள்ள கைக்கடிகாரத்தை நம்மிடம் காட்டி நேரத்தைப்  பார்த்துக் கொள்ளுங்கள் என்று சைகையாகச்  சொல்லி விடுவார்கள். தினசரி வாழ்க்கையில் நாம் தமிழிங்கிலிஷ் பயன்படுத்துவது போல் அவர்கள் ஆங்கிலம் கலந்த கொரியன் மொழி பேசுவதில்லை போலும். நான் சென்ற மேற்படிப்பு குறுகிய கால 10 மாதம் தான். எல்லா பாடங்களும் ஆங்கிலத்தில் இருந்தன. ஒரு பாடம் கொரிய மொழி மற்றும் கலாச்சாரம் பற்றியது .

இன்னொன்று நான் கவனித்து, அதை நாம் ஏன் நம் நாட்டிலும் பின்பற்றக் கூடாது என்று வியந்தது என்னவென்றால் எல்லா சுற்றுலா தலங்களிலும் டிக்கெட் வாங்கும் போது அவர்களின் டிக்கெட் பின்புறம் அந்த சுற்றுலா தலத்தின் போட்டோ ஒன்று போட்டிருக்கும். கூடவே சுற்றுலா தளத்தை உள்ளே சுற்றிப் பார்ப்பதற்கான வரைபடம் கூட வேண்டியிருக்கும் பட்சத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.

பிச்சைக்காரர்களை ரொம்ப அதிசயமாக, அபூர்வமாகத் தான் பார்க்க முடியும். ஒரு நாள் பிளாட்பாரம் ஒன்றில் நாங்கள் நடந்து செல்லும் பொது, ஒரு பிச்சைக்காரனைப்  பார்த்தேன்.  அவன் கொரியன். கொரியன்காரர்களிடம் தான் பிச்சைக்காரன் கேட்டான்.  ஆனால், வெளிநாட்டவர் பக்கத்தில் வரும் போது விலகிச் சென்று விட்டான்.

அவர்களின் உணவு பழக்கம் கவனிக்கத் தக்கது. மூன்று வேளையும் அரிசி முக்கிய இடம் பிடித்துள்ளது. நம்மூர் போல் அல்லாமல் அது பேஸ்டி (பசை போன்ற) டைப் சேர்ந்தது. குச்சியில் எடுத்து சாப்பிட லகுவாக இருக்குமல்லவா? . இன்னொன்று, கீழே உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் (படம் ). பாரம்பரியம் பின்பற்றும் உணவு விடுதிகளில் இன்றும் விரும்பப்படுகிறது.

நம் நாட்டின் இட்லி போல், கொரியாவின் கிம்ச்சி (Kimchi ) என்று அழைக்கப்படும் நொதித்தல் (fermentation) மூலம் உருவாக்கப்பட்ட முட்டைகோஸ் மிகவும் பிரபலமான சைட் டிஷ் (உப்பு , சிவப்பு மிளகாய் சேர்த்து காரமானது கூட). அவர்கள் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த இது கொரியாவின் தேசிய உணவு என்றே சொல்லலாம். போட்டோவிற்கு நிற்கும் போது ‘ஸ்மைல் பிளீஸ்’ என்பதற்கு பதில்  ‘கிம்ச்சி’ என்பார்கள்.

உணவகத்தில் தொட்டியில் உயிருடன்  உள்ள கடல் உயிரினங்களை சுட்டிக்காட்டினால் , ஊழியர்கள் அதை முறையாக சுத்தம் செய்து நம் பிளேட்டில் வைப்பார்கள். சோயாசாஸ் உடன் சுவைத்து சூப்பர் என்று கொரியர்கள் விரும்புவார்கள். நான் பார்த்துள்ளேன். ஆனால், கை வைக்க வில்லை.

டிசம்பர் – பிப்ரவரி  மாதங்கள் நம்மை உறைய வைக்கும் பயங்கர குளிர். யுனிவர்சிட்டி லாக்டவுன்-ல் இருக்கும். நான் இருந்த டார்மிட்டரி அறையில் வெப்பமூட்டும் விதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. 

பொதுவாக, எல்லா இடங்களிலும் சுவர் பகுதியில் ஹீட்டிங் சிஸ்டெம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், அங்கே தரை தளத்தின் கீழ் வெப்பமூட்டும் வசதி. இந்த முறை பாரம்பரியமானது என்று கேள்விப்பட்டேன். அதை உருவாக்க மிகுந்த பாதுகாப்பு கொண்ட கட்டமைப்பு வேண்டியிருக்கும் அல்லவா?.

பனிக்காலத்தில் ஒலிம்பிக் ஸ்டேடியம் சென்றோம் ஒரு முறை (படம்) . 1988ல் சியோலில் ஒலிம்பிக் நடந்தது. ஒரு நாட்டில் ஒலிம்பிக் நடைபெறுவதென்பது அந்த நாட்டின் முழுமையான வளர்ச்சியைக் காட்டுகிறது. ஒலிம்பிக் நகரத்தேர்வு என்பது லேசு பட்ட காரியமல்ல. அப்படியென்றால் 80களில் எப்படிப்பட்ட உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 2032 வரையில் ஒலிம்பிக் நடைபெறும் இடம் முன்னரே தேர்வு செய்யப்பட்டு விட்டது.

கொரியா அரண்மனை (பெரும்பாலும் மரங்களை கொண்டு கட்டப்பட்டவை), கொரியா கிராமிய நாட்டுப்புற மியூசியம் , பொழுதுபோக்கு பூங்கா, ஒரு மலையேற்றம்  போன்றவற்றிக்கு விஜயம் செய்தோம். ஒரு கண்கவர் பொருட்காட்சி ஒன்றில் நம் சப்பாத்தி, கொழுக்கட்டை, வடை போன்ற கொரியன் உணவு பொருட்களின்  தயாரிப்பு இயந்திரங்களைப்  பார்த்தோம். என் ஆராய்ச்சி நிறுவனத்தில் அப்போது தான் அத்தகைய முன்முயற்சிகள் ஆரம்பித்தன. (படங்கள்).

நம் நாட்டைப் பற்றி அவர்கள் குறைந்த அளவே தெரிந்துக்  கொண்டிருந்தார்கள். புத்தர் பிறந்த நாடு என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. மேலும், நம் நாட்டில் பலதரப்பட்ட கடவுள்களை வழிபடுவதும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. பெரும்பாலான இந்தியர்கள் வெஜிடேரியன் என்ற நினைப்பும் உண்டு.

கொரியாவின்   நகவெட்டி, எலக்ட்ரிக் சுடு பாத்திரம், குடை , ஜெர்கின் (வின்டர் கோட் ), சுற்றுலா தளங்களின் டிக்கெட்டுகள் இன்றும் என்னுடன் வாழ்ந்துக் கொண்டு கொரியாவின் தரத்தைப்  பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

நான் ஏன் இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று கேட்கிறீர்களா?. நாம் எவ்வளவு தூரம் தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருந்தோம் என்று சுட்டிக்காட்டத் தான்.  நாமும் 1990-களுக்குப் பிறகு வெகு விரைவாக வளர்ச்சி கொண்டுள்ளோம் என்பதை மறுக்க முடியாது.

கோவிட் காலத்தில் வெகு விரைவாக தடுப்பூசி படைத்தோம். முக்கியமாக, விண்வெளி ஆய்வுத்துறையில் ஜப்பான் , கொரியா போன்றவர்களும் பொறாமைப்படும் அளவிற்கு முன்னேறியுள்ளோம். அந்தத் துறையில் மட்டும் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பது காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் கலாச்சாரத்  தாக்குதல் காரணமாக நாம் மிகவும் மாறியுள்ளதைப் போலவே கொரியர்களின்  வாழ்க்கை முறையும்  வெகுவாக மாறியிருக்கலாம். காலம் கை கூடி வந்தால், கொரியா நாட்டிற்கு மறு விஜயம் செய்து ஒரிஜினல் ‘கிம்ச்சி’ சுவைக்க ஆவலாக உள்ளேன்.

இன்னொரு சுவையான கொசுறு தகவல் : உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் சரயு நதிக்கரையில், ராம் கதா பூங்காவில் கொரிய ராணி ஹியோ ஹ்வாங்-ஓக்கின் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.

Heo Hwang-ok

கடைசியாக, ஒரு பொய்யான சம்பவம் (சுத்த தங்கம் எதுக்கும் ஆகாது.  100 பர்சன்ட் நிஜம் வேண்டாம் என்பதால் இதைச் சேர்க்கிறேன். வாசகர்கள் மன்னிக்க.) : அங்கே மெட்ரோவில் ஒரு நாள் பயணிக்கும் போது ‘அம்மா’ என்று குரல் கேட்கச் சட்டென்று திரும்பிப்  பார்த்தால் , ஒரு கொரியன் சுட்டிக்  குழந்தை அதன் அப்பாவிடமிருந்து அம்மாவிடம் தாவிக்கொண்டிருந்தது. பின்னர், இன்டெர் நெட்டில் நோண்டினால் , தமிழில் ‘அப்பா , அம்மா’ என்றால் கொரிய மொழியிலும் அதே தானாம்.

இதைப் படித்த தமிழில் மூச்சு விடும் என் நண்பர் கமலேஷ் (பள்ளி நாட்களில் நடிப்பில் சூப்பர் ) என்பவர் கொரியா மொழிக்கும் தமிழ் தான் தாய் என்றாராம். கொரியன் அன்பர்கள் அதை கேள்விப்பட்டு கொதித்தார்களா ? என்ற தகவல் இல்லை. நான் இதையெல்லாம் மொழியியல் வல்லுனர் ஆய்வுக்கு விட்டு விடுகிறேன்.

(என் கொரியா நினைவுகளை மீட்டெடுத்த விகடனுக்கு நன்றி . பழைமையான ஆல்பத்திலிருந்து ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோக்கள். தரம் குறைவாக இருப்பதற்கு மன்னிக்கவும் ).

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *