
புதுடெல்லி: வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் வீடு சேதப்படுத்தப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் ரவீந்திரநா் தாகூர் வாழ்ந்த வீடு வங்கதேசத்தின் சிராஜ்கன்ஜ் மாவட்டத்தில் உள்ளது. இந்த வீட்டை மர்ம நபர்கள் கடந்த செவ்வாய் கிழமை தாக்கி சேதப்படுத்தினர்.
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: வங்காளம், இந்திய கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் அடையாளமாக திகழ்பவர் ரவீந்திரநாத் தாகூர். இவரது வீட்டை ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹெபாசத்-இ-இஸ்லாம் அமைப்பினர் சேதப்படுத்தியதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பவில்லை. அவர் வங்கதேச ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கிகளாக பார்க்கிறார். அரசியல் காரணங்களுக்காக அவர் அமைதியாக இருக்கிறார்.