
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.
இக்கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் வரும் ஜூலை 7-ம் தேதி 14 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
9 நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தின் உச்சியில் உள்ள கோபுரக் கலசங்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
90 சதவீத பணிகள் இந்தப் பெருந்திட்ட வளாகப் பணிகளில் நிறைவு பெற்றுள்ளன. மற்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் கோயிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர், பெருமாள், வள்ளி, தெய்வானை, நடராஜர் என 6 சன்னதிகளில் உள்ள கோபுர விமான கலசங்கள் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்காக கோயிலின் மேல் உள்ள கோபுரத்தில் கலசங்கள் அனைத்தும் கழற்றப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டன.
கோபுரத்தின் மேலே இருந்த கலசங்களைக் கழற்றியபோது 14 வருடங்களுக்கு முன்பு இந்தக் கலசங்களில் வைத்த நவதானியங்களில் ஒன்றான வரகு எந்தவித சேதமும் அடையாமலும், கெட்டுப்போகாமலும் இருந்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கலசங்களில் இருந்த வரகை மொத்தமாகச் சேகரித்து தனியாக எடுத்துப் பத்திரப்படுத்தினர்.

மேலும் நடராஜர் கலசத்தில் மயில் இறகும், ஆமணக்கும், மூலவர் மற்றும் தெய்வானை கலசத்தில் செப்பு தகடும் இருந்தது. முதலில் தனித்தனியாகக் கழற்றப்பட்ட கலசங்களுக்கு பாலீஸ் போடப்பட்டன.
அதைத் தொடர்ந்து அந்தக் கலசங்களின் ஒவ்வொரு பகுதியிலும் பாதரசம் பூசப்பட்டன. அதன்பிறகு கலசங்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தங்க முலாமை அந்தக் கலசங்கள் மேல் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.