
சென்னை: சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில், ரூ.151 கோடி மதிப்பில் சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய நவீன மந்தைவெளி பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனம் ரூ.151 கோடி மதிப்பில் மந்தைவெளி பேருந்து முனையம் மற்றும் பணிமனையில் நவீன சொத்து மேம்பாட்டு கட்டிடத்துக்கான ஒப்பந்தத்தை கோரியுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3-வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையமான மந்தைவெளி மெட்ரோ நிலையத்தின் நுழைவு, வெளியேறும் கட்டமைப்புகள், தற்போதைய மந்தைவெளி பேருந்து நிலையம் மற்றும் பணிமனை வளாகத்துக்குள் திட்டமிடப்பட்டுள்ளன.