Doctor Vikatan: என் தங்கைக்கு 30 வயதாகிறது. 5 மாத கர்ப்பமாக இருக்கிறாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவளுக்கு தீவிரமான இருமல் ஏற்பட்டது. வறட்டு இருமல்தான்… ஆனால், ஒருநாள் முழுவதும் இருந்தது. இருமும்போது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்துகொண்டே இருந்தாள். இருமல் மருந்து குடிக்கவும் மறுத்துவிட்டாள். இப்படிப்பட்ட இருமலுக்கு என்ன காரணம்… அடிவயிற்றிலிருந்து இருமும்போது கரு கலைய வாய்ப்புள்ளதா… இன்னொரு முறை இப்படி நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
ஐந்து மாத கர்ப்பத்தில் வறட்டு இருமல் ஏற்பட வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம். உங்கள் தங்கைக்கு ஏற்கெனவே அலர்ஜி பிரச்னை இருக்கிறதா என்று பாருங்கள். உதாரணத்துக்கு, செல்லப் பிராணிகளால் அலர்ஜி, தூசு அலர்ஜி போன்ற ஏதாவது இருந்தாலும் ஜலதோஷம், தும்மல், இருமல் வரலாம்.
கர்ப்பிணிகளுக்கு உணவு எதுக்களித்தல் (Acid reflux) பிரச்னை சகஜமாக இருக்கும். கர்ப்பகாலத்தில் சரியாகச் சாப்பிட முடியாது. வாந்தி உணர்வு இருப்பதால் சாப்பாட்டைத் தவிர்ப்பார்கள்.
கர்ப்ப காலத்தில் செரிமானம் மந்தமாவதால் உணவு எதுக்களித்துக் கொண்டு வரலாம். சிலருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கக்கூடும். அதாவது ஏற்கெனவே ஆஸ்துமா பாதிப்பு இருந்தால், கர்ப்ப காலத்தில் அதன் தீவிரம் அதிகமாகலாம். அதன் காரணமாகவும் இருமல் வரலாம்.
சிலருக்கு படுத்த நிலையில் இருமல் வரும். எழுந்து உட்கார்ந்தால் சரியாகிவிடும். இதை ‘போஸ்ட் நேசல் டிரிப்’ (Post-nasal drip) என்று சொல்வோம். ஏற்கெனவே சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். வீட்டில் யாராவது புகை பிடிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தால் அதனாலும் இருமல் வரலாம்.

சுற்றுப்புறத்தில் தூசு, புகை அதிகமிருந்தாலோ, டூ வீலர் ஓட்டுபவர் என்றால் வாகனப் புகையாலோ இருமல் வரலாம். நீங்கள் பயப்படுகிற மாதிரி இருமலால் கரு கலைய வாய்ப்பில்லை. ஏனென்றால், கருவிலுள்ள குழந்தையானது கர்ப்பப்பைக்குள் மிகப் பாதுகாப்பாக, பத்திரமாகவே இருக்கும்.
அதே சமயம், இருமல் நிற்கவில்லை, தீவிரமாக இருக்கிறது என்றால் அதற்கான காரணம் என்ன என பார்க்க வேண்டியது அவசியம். நிமோனியா, டிபி போன்ற பாதிப்புகள் இருக்கின்றனவா என்பதற்கான பரிசோதனைகள் அவசியம்.
நீண்ட நாள்களாக இருமல் தொடரும் நிலையில், அந்த நபருக்கு ஆக்ஸிஜன் சப்ளை குறையலாம். டிபி நோயாளிகளைப் பார்த்தால் அவர்கள் தொடர் இருமலின் காரணமாக உடல் மெலிந்து, களைப்பாக காணப்படுவார்கள். எனவே, கரு கலைந்துவிடுமோ என்ற பயத்தை ஒதுக்கிவிட்டு, இருமலுக்கான காரணம் அறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.