• June 13, 2025
  • NewsEditor
  • 0

“மக்கள் வரிப்பணத்தில் நடக்கும், அரசு விழாவில் தொடர்ந்து அதிமுக குறித்து அவதூறு பரப்பினால் அதிமுக தொண்டர்கள், முதலமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டத் தயங்க மாட்டார்கள்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண்மை பல்கலைக்கழகம், உழவர் நலத்துறை சார்பில் நடந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தோளில் துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது.

உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாகத் துணை நிற்பவர்கள். கடந்த அதிமுக ஆட்சி எல்லா வகையிலும் விவசாயிகளுக்குத் துரோகம் செய்திருந்தது, எனவே அதிமுக என்ற களையை அகற்ற வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், “எங்களின் உயிரினும் மேலான தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாயியாகப் பிறந்து 50 ஆண்டுக்கால பொது வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்து தன் உழைப்பால் வரலாற்றில் இடம்பெற்று விவசாய முதல்வராக மக்களின் இதயங்களில் இடம்பெற்றவர்.

எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கைப் பார்த்து நடுங்கும் ஸ்டாலின் அநாகரிகமாகப் பேசியதைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் வந்த எடப்பாடியாரின் ஆட்சிக் காலம் விவசாயிகளின் பொற்காலமாக இருந்தது. அந்த வயிற்று எரிச்சலால் வார்த்தைகளைக் கொட்டி இருக்கிறார் ஸ்டாலின்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் மதுரையில் உள்ள வேளாண்மை கல்லூரியைப் பல்கலைக்கழகமாக மாற்றுவோம் என்று அறிவித்தீர்கள், இதுவரை ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை.

விவசாயிகளின் பாதுகாப்பு நாங்கள்தான் என்று மார் தட்டும் நீங்கள், மனசாட்சி இல்லாமல் பேசி உள்ளீர்கள்? முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்டுவோம் என்று கேரளா அரசு கூறியதற்கு மௌனச்சாமியாக இருந்தீர்கள்.

மேகதாது குறுக்கே அணை கட்டுவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு வந்து பேசியபோதும் ஆந்திரா அரசு பாலாறு குறுக்கே அணை கட்டுவோம் என்று கூறியபோது. நீங்கள் மௌனமாக இருந்தீர்கள்.

விவசாயிகளுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? காவிரியை மீட்டுத் தந்தது, முல்லைப்பெரியாற்றில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது ஜெயலலிதாவின் அரசாகும், அதுபோல எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டம், எண்ணற்ற தடுப்பணைகள், அத்திக்கடவு அவிநாசி திட்டம் எனப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார்.

மீத்தேன் திட்டத்திற்குக் கையெழுத்துப் போட்டு விவசாயிகளுக்குத் துரோகம் செய்து நீங்கள்? காவேரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உருவாக்கித் தந்தவர் எடப்பாடி பழனிசாமி.

மு.க.ஸ்டாலின்

இன்றைக்கு அதிமுகவை களை என்று சொல்லியும், எட்டு கோடி தமிழர்களின் பாதுகாவலர், இரண்டு கோடி தொண்டர்களின் உயிர் நாடியான எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளீர்கள்.

நாங்கள் பலமுறை எச்சரித்தும், நாலந்தர பேச்சாளர் போலப் பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல?

அதிமுகவையும், எடப்பாடியாரையும் அவதூறாகப் பேசி வருவதற்கு மக்கள் உங்களை நிச்சயம் தண்டிப்பார்கள். எடப்பாடியாரை காவிரி காப்பாளர் என்று விவசாயிகள் பட்டம் சூட்டினர், உங்களைப் போன்று வாடகைப் புலவர்களை வைத்து புகழவில்லை.

பச்சை துண்டு போட்டால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? உங்களுக்கு நிலம், நாற்று என்றால், களை என்றால் தெரியுமா? பூச்சி மருந்துக்கும், உரத்திற்கும் வேறுபாடு தெரியுமா? நீங்கள் கரும்புத் தோட்டத்தில் சிமெண்ட் சாலை அமைத்து ஷு அணிந்து சென்ற வரலாற்றை யாரும் மறக்கவில்லை,

அரசு விழாவில் அதிமுகவையும், பொதுச் செயலாளரையும் நீங்கள் தொடர்ந்து விமர்சித்தால், அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் எங்கே சென்று கூட்டம் நடத்தினாலும் அதிமுக தொண்டர்கள் கருப்புக்கொடி வ்காட்டுவார்கள் என எச்சரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *