
பதிண்டா: பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரைச் சேர்ந்த காஞ்சன் குமாரி (30), கமல் கவுர் பாபி என்ற பெயரில் பல்வேறு சமூக ஊடக இன்ப்ளூயன்சராக இருந்து வந்தார். இன்ஸ்டாகிராமில் இவரை 3.83 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், பதிண்டா நகரில் ஆதேஷ் மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து அவருடைய உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து பதிண்டா காவல் கண்காணிப்பாளர் நரிந்தர் சிங் கூறும்போது, “காஞ்சன் குமாரி பதிண்டாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவர் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. உடல் கூறாய்வுக்கு பிறகு இறப்புக்கான காரணம் தெரியவரும்” என்றார்.