
“தீவிரவாதத்தை உறுதியோடு எதிர் கொண்ட ஒரு ஆதில்ஷா மட்டுமல்ல, பல்லாயிரம் ஆதில்ஷாக்கள் காஷ்மீர் எங்கும் உண்டு” என்று அவர் தந்தை தங்களிடம் கூறியதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தலைமையிலான குழு இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளது.
இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்ரா ராம், கே.ராதாகிருஷ்ணன், ஜான் பிரிட்டாஸ், பிகாஸ் ரஞ்சன், ஏ.ஏ.ரஹீம் ஆகியோரோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் சென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்கள் படும் துயரங்களை மதிப்பிடுவதற்காகச் சென்றுள்ள இக்குழுவினர் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் அங்கு மக்களைச் சந்தித்தனர்.
சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினரும் காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமியோடு சமீபத்தில் உரியில் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இந்த நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த ஆதில் ஷாவின் வீட்டிற்குச் சென்றனர்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் கூறும்போது, “தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைத் தேடி, தேடி சுட்டுக்கொலை செய்த போது தீவிரவாதிகளைத் தைரியமாக எதிர்கொண்ட முப்பது வயது இளைஞன் ஆதில் ஷா, சுற்றுலாப் பயணிகளை நோக்கிச் சுடப்பட்ட துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஶ்ரீநகரில் ஆதில் ஷா வின் தந்தை சையத் ஹைதர் ஷா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்தோம். மகனை இழந்த துயரத்தைத் தாண்டி, மகன் வெளிப்படுத்திய உறுதியின் நம்பிக்கை மிளிரும் மனிதராக அவர் இருந்தார்.
‘தீவிரவாதத்தை உறுதியோடு எதிர்கொண்ட ஒரு ஆதில் ஷா மட்டுமல்ல பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீர் எங்கும் உண்டு’ என்று அவர் சொன்ன வார்த்தைதான் இந்த தேசம் எங்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய வார்த்தை.
‘என் உடலில் ஓடுவது குருதியல்ல’ என மேடையில் பேசும் பேச்சல்ல, தன் முப்பது வயது மகன் சிந்திய குருதியின் உலராத ஈரத்தோடு அவரது தந்தை சையத் ஹைதர் ஷா சொல்லும் சொல் தான் இந்த தேசத்தின் சொல்.
சையத் ஹைதர் ஷாவின் குரல்தான் தீவிரவாதத்திற்கு எதிரான உறுதிமிக்க குரல். தீவிரவாத தாக்குதலைத் தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் மதவாதக் கூட்டத்திற்கு எதிரான வலிமையான குரல்.
இந்த நிலமெங்கும் நீடித்து எதிரொலிக்கும் குரல். காஷ்மீரத்தின் குரல் மட்டுமல்ல…. நம் காலத்தின் குரல் …” என்றார்.
பின்பு ஸ்ரீநகரில் சிபிஎம்-மின் காஷ்மீர் மாநிலக்குழு நடத்திய கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தலைமையில் இக்குழுவினர் பங்கேற்றார்கள்.