• June 11, 2025
  • NewsEditor
  • 0

டெல்லி பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதன்முறையாக “நெருக்கமான உறவுகளைப் பேசுதல்” என்ற தலைப்பில் பாடதிட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜென் சி தலைமுறையினர் காதல் தோல்விகளை எதிர்கொள்ளுதல், ரெட் ஃப்ளாக்களை அடையாளம் காணுதல், ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குவதற்கு இந்த பாடம் உதவும் எனக் கூறப்படுகிறது.

ரிலேஷன்ஷிப்

2025-26 கல்வியாண்டில் அனைத்து துறைகளிலும் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்த பாடத்தை தேர்தெடுக்கலாம். பாரம்பரிய கல்விமுறையில் நேரடியாக உரையாடப்படாத காதல், நட்பு, பொறாமை மற்றும் பிரிவு உள்ளிட்ட உறவுச் சிக்கல்களைக் கையாள இளம் தலைமுறையினருக்கு உதவும் வகையில் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை முன்னெடுப்பில் இந்த வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற, உளவியலில் அடிப்படை புரிதல் கொண்ட மாணவர்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நச்சுத்தனமான உறவுகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இளம் வயதினரிடையே அதிகரிக்கும் வன்முறை பற்றிய கவலைகளே இந்த படிப்பினை அறிமுகப்படுத்தக் காரணம் என்கின்றனர்.

Young Adults
Young Adults

இந்த பாடத்தை,

1. நட்பு மற்றும் நெருக்கமான உறவுகளின் உளவியல்

2. காதலைப் புரிந்துகொள்ளுதல்

3. உறவுகள் மோசமடைவதற்கான அறிகுறிகள்

4. செழித்து வளரும் ஆரோக்கியமான உறவுகள் என நான்கு அலகுகளாகப் பிரித்துள்ளனர்.

கடந்த மே இறுதியிலிருந்து ஜூன் தொடக்கத்தில் மட்டும் டெல்லியில் 3 குழப்பமான கொலைகள் நடந்துள்ளன. மூன்றும் நச்சுத்தன்மையான நெருக்கமான உறவுகளால் ஏற்பட்டவை.

கோமல் என்ற 21 வயது பெண், கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார், விஜயலக்‌ஷ்மி என்ற 19 வயது பெண் அவரது 20 வயது காதலரால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார், மெஹெக் ஜெயின் என்ற 18 வயது பெண் அவரது காதலரால் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.

இந்த கொலைகள் நேரடியாக பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடர்புடையவையல்ல என்றாலும், இளைஞர்களிடையே உணர்ச்சி ரீதியான உறுதியற்ற தன்மை, உடைமை மனப்பான்மை மற்றும் கட்டுப்படுத்த முடியாத பொறாமை  ஆகிய குணங்கள் ஆபத்தான முறையில் அதிகரித்திருப்பதுதான் காரணம் என்பதால் இந்த வகுப்புகள் முக்கியமானவை என்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *