• June 11, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிராவில் மதுபான விலையை மாநில அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் படி மதுபானங்கள் மீதான கலால் வரியை மாநில அமைச்சரவை 78 முதல் 85 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. இதன் படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களில் விலை 90 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு குவாட்டர் விலை 205 முதல் 215 வரை இனி விற்கப்படும்.

பிரிமியம் வெளிநாட்டு மதுபான வகைகள் விலை 9-12 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர நாட்டுச்சாராயத்திற்கான கலால் வரியும் 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குவாட்டர் விலை ரூ.10-15 வரை அதிகரிக்கும். மேலும் பெர்மிட் ரூம் மற்றும் மதுபானக்கடைகளின் வருடாந்திர லைசென்ஸ் கட்டணம் 10-15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானத்திற்கும் மாநில அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன் ஆரம்ப கட்ட குவாட்டர் விலை ரூ.150-ல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் இந்த திடீர் மதுபான விலை அதிகரிப்பு குடிமகன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகாராஷ்டிரா அரசு ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது.

பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் லட்கி பெஹின் யோஜனா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மாநில அரசு கடுமையான சவாலை சந்தித்து வருகிறது. எனவே மதுபானங்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் 14000 கோடி நிதி திரட்ட அரசு திட்டமிட்டு இருக்கிறது.

அதேசமயம் ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டதற்கு பீர் பார் உரிமையாளர்கள் மற்றும் மதுபானக்கடை உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இக்கட்டண உயர்வால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 2011ம் ஆண்டு கடைசியாக மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *