
புதுடெல்லி: “மோடி அரசின் 11 ஆண்டு கால ஆட்சியில் எந்தப் பொறுப்புணர்வும் இல்லை, ஆனால் வெறும் பிரச்சாரம் மட்டுமே உள்ளது” என்று தானே ரயில் விபத்து சம்பவத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 4 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர், 6 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "மோடி அரசு 11 ஆண்டு கால 'சேவை’யை கொண்டாடும் அதே வேளையில், நாட்டின் யதார்த்தம் மும்பையில் இருந்து வரும் துயரச் செய்திகளில் பிரதிபலிக்கிறது. பலர் ரயிலில் இருந்து விழுந்து இறந்தனர். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு இந்திய ரயில்வே முதுகெலும்பாக உள்ளது. ஆனால், இன்று அது பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறியுள்ளது.