
சென்னை: “அதிகமான நிதியை தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வஞ்சித்து, வாட்டி வதைத்து வசூலித்து விட்டு தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கியதாக அமித் ஷா கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இதற்கு அமித் ஷா பதில் கூறுவாரா?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே பாஜக காலூன்ற முடியாத வகுப்புவாத எதிர்ப்பு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். நேற்று மதுரையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் 2026-ல் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் அமைய இருக்கிற கூட்டணிக்கு அதிமுக தலைமையேற்கப் போகிறதா? அல்லது பாரதிய ஜனதா தலைமையேற்கப் போகிறதா? என்பது முடிவு செய்யாத நிலையில் தன்னிச்சையாக பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.