
சென்னை: சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளது? என்ற விவரங்கள் குறித்து ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் வாட்ஸ் அப் குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளித்த புகார் மீது நொளம்பூர் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வானமாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.