
சென்னை: மெரினா கடற்கரையில் நீலக்கொடி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக அங்கு புதுவரவாக மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சக்கர நாற்காலிகளை மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.
உலகின் பல்வேறு கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை, கடற்கரை தூய்மை, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து, டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை, சிறந்த கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கி வருகிறது. இச்சான்றிதழ், சர்வதேச அளவிலானது என்பதால், இச்சான்றிதழ் பெறும் கடற்கரைப் பகுதிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதுடன், அங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பதால் உள்ளூர் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.