
ஜம்மு காஷ்மீரில் ஈபிள் டவர் உயரத்தை (330 மீட்டர்) விடவும் உயரமாக கட்டப்பட்ட ரயில் பாலமான செனாப் பாலத்தை (359 மீட்டர்) கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 6) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தற்போது உலகின் மிக உயரமான ரயில் பலமாக அறியப்படும் இந்தப் பாலம், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியின் குறுக்கே கட்ட 2002-ல் முடிவு செய்யப்பட்டு, 2003-ல் அனுமதி பெறப்பட்டது.
அதன்படி, 2004-ல் பாலம் காட்டும் பணிகள் தொடங்கியது. இருப்பினும், பாலத்தின் உறுதித்தன்மை குறித்து எழுந்த பல்வேறு கேள்விகளால் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் 2009-ல் பாலத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.
பின்னர், பாலம் காட்டும் பணிகள் 2010-ல் மீண்டும் தொடங்கின. ஜம்மு காஷ்மீரானது வடக்கு ரயில்வேயின் கீழ் வந்தாலும், மலைப்பகுதி காரணமாக இப்பணிகள் கொங்கன் ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பிறகு 2014-ல் ஆட்சி மாறினாலும் பாலம் காட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியாக, சுமார் 15 ஆண்டுகால கடின உழைப்பில் ரூ.1,486 கோடி செலவில் 1,315 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் அகலம், 359 மீட்டர் உயரத்தில் செனாப் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, உலகின் மிக உயரமான பாலமாக ஜூன் 6-ம் தேதி திறந்துவைக்கப்பட்டது.
இத்தகைய சாதனைமிக்க இந்த இரும்புப் பாலத்தின் வெற்றிகரமான கட்டுமானத்தில் மிக முக்கியமானவர் சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ஜி மாதவி லதா ஆவார்.

யார் இந்த பேராசிரியர் ஜி மாதவி லதா?
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் (IISc) தற்போது பேராசியராகப் பணியாற்றிவரும் மாதவி லதா, இந்த செனாப் பாலத் திட்டத்தில் சுமார் 17 ஆண்டுகள் புவி தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்.
1992-ல் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங்கில் ஃபர்ஸ்ட் கிளாஸில் பி.டெக் (B.Tech) முடித்த கையோடு, வாரங்கலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் எம்.டெக் (M.Tech) மாணவியாகத் தங்கப் பதக்கம் வென்றார்.
புவி தொழில்நுட்ப பொறியியலில் புலமைவாய்ந்தவரான மாதவி லதா, 2000-ம் ஆண்டு ஐஐடி மெட்ராஸில் புவி தொழில்நுட்ப பொறியியலில் முனைவர் பட்டத்தை முடித்தார்.

தொடர்ச்சியாகத் தனது துறையில் சிறப்பாகப் பணியாற்றிய இவருக்கு, 2021-ம் ஆண்டில், இந்திய புவி தொழில்நுட்ப சங்கத்தால் அவருக்கு சிறந்த பெண் புவி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டது.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அறிவியல் (S), தொழில்நுட்பம் (T), பொறியியல் (E), கலை (A), கணிதம் (M) ஆகிய துறையில் சிறந்த விளங்கும் பெண்களைக் கவுரவிக்கும் வகையில், 2022-ம் ஆண்டில் இந்தியாவின் STEAM என்ற பெயரில் 75 பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். அதில், மாதவி லதாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.