
மதுரை: பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் இரவு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர், சிந்தாமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார்.
இந்நிலையில், நேற்று காலை 11.52 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். கிழக்கு கோபுர வாசல் அருகே கோயிலுக்குள் சென்ற அமித்ஷாவை கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
பின்னர் கோயிலுக்குள் சென்ற மத்திய அமைச்சர், அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி, முக்குறுணி விநாயகர், விபூதி விநாயகரை தரிசனம் செய்தார். உச்சிகால பூஜையில் பங்கேற்ற பிறகு 12.22 மணியளவில் கோயிலில் இருந்து வெளியே வந்து, அங்கிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் வந்தனர்.