• June 8, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 06-06-2025 அன்று 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவில் உள்ள டாக்டர் நவநீதன், டாக்டர் ஸ்ரீ சூர்யா, டாக்டர் அரவிந்த், டாக்டர் சசிகலா, டாக்டர்.ஸ்ரீ பாலாஜி, செவிலியர்கள் அம்பிகா, ராஜலட்சுமி , கவிதா, சசிகலா, சௌமியா, குறிஞ்சி ஆகியோர் பணியாற்றியிருக்கின்றனர்.  இதேபோன்று, கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 1 – ல் (1-10-2024) இதேபோல் 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்று அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பாராட்டுகளை காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் மற்றும் மருத்துவக் குழுவினர் பெற்றது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த ஆண்டும் இந்த சிறப்பான சாதனையைச் செய்துள்ளனர். வட்டார மருத்துவ அலுவலர் அனைத்து தாய்மார்களையும் பார்வையிட்டு குழந்தைகள் நல பெட்டகம் அளிக்கப்பட்டு மேலும் காரையூரிலேயே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள அறிவுரை வழங்கி மேலும் இங்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சை முறைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ராமகணேஷ் வழிகாட்டுதலின்படி, ‘மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை’ என்கிற இலக்கோடு அனைத்து சுகப்பிரசவங்களும் பாதுகாப்பாகவும் மருத்துவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இததகைய சாதனையை இரண்டாவது முறையாக செய்துள்ளனர்.

மருத்துவர் குழுவுடன்

இதுபற்றி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் கூறும்போது, “காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்களின் மேற்பார்வையில் சுகப்பிரசவங்கள் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதர நேரங்களில் வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் அவர்களுடைய பிரசவத்தின் தன்மையை பொறுத்து காரையூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை வளையப்பட்டி, அரசு ராணியார் மருத்துவமனை புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இதன் மூலம், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் பிரசவங்கள் நடைபெற்று வருகின்றது. அதேநேரம் இதன் மூலம், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் நம்முடைய புதுக்கோட்டையில் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, ‘மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை’ என்னும் இலக்கினை அடைய மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்” எண்டார்.

தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்டு வரும் காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்களும், புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் ராம் கணேஷும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *