
சென்னை: “பதற்றம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஒரு கூட்டணியாக திமுக கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பதற்றம் பாஜக கூட்டணிக்கு இருப்பதால்தான் மத்திய அளவில் முக்கிய பதவியில் இருக்கின்ற அமித்ஷா போன்றவர்கள் கூட தமிழகத்துக்கு அவ்வப்போது வருகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் சூளை பகுதியில் உள்ள அகண்ட தண்டு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று (ஜூன் 8) நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பின்னர் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சிக்கு எவ்வித பதற்றமோ, பயமோ இல்லை. திராவிட மாடல் ஆட்சி நாயகன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற இந்த கூட்டணி வலுவோடும் பொலிவோடும் தெளிவோடும் இருக்கின்றது. பதற்றம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஒரு கூட்டணியாக இந்த கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.