• June 8, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், 8 கோட்டங்கள் மூலம் சுமார் 22 ஆயிரம் பேருந்துகளை பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வருகிறது.

இதில் நெல்லை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் என 3 மண்டலங்கள் மூலம் 1985 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான டீசல், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

பணிமனை

இந்த நிலையில் மத்தியரசு டீசல் மொத்தக் கொள்முதலுக்கான விலையில் ரூ.2-ஐ அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, `நெல்லை அரசுப் போக்குவரத்து கழக’த்திற்குத் தேவையான டீசல் தனியார் பங்குகளில் இருந்து ரூ.2-க்கு குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது.  இந்த நிலையில் சமீபத்தில் நெல்லை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சரவணன், தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து பாபநாசம் கிளை மேலாளர் சுரேஷ் பதவி உயர்வு பெற்று நெல்லை பொது மேலாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் நெல்லைக்கு பொறுப்பேற்க வந்த போது வன்ணார்பேட்டை தாமிரபரணி டிப்போவில் டீசல் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது 19 ஆயிரம் லிட்டர் டீசல் பற்றாக்குறையாக இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து டீசல் பற்றாக்குறை குறித்து தணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

பணிமனை

இதன்படி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தணிக்கை பிரிவு அதிகாரிகளின் ஆய்வில் 19 ஆயிரம் லிட்டர் டீசல் பற்றாக்குறை உள்ளதாகவும், பேருந்துகளில் கி.மீ இயக்கத்திற்காக டீசலைக்கூட்டி, குறைத்து போடப்பட்டதால் டீசல் இருப்பு பற்றாக்குறையாக உள்ளதாக நெல்லை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தசரதனுக்கு அறிக்கையாக சமர்ப்பித்தனர்.

இதன்படி டீசல் பற்றாக்குறைக்கு காரணமான கிளை மேலாளர் கிருஷ்ணகுமார், உதவிப் பொறியாளர்கள் (தணிக்கை) ஆவுடையப்பன், பிரின்ஸ், மாடசாமி, ஸ்டோர் கீப்பர் சங்கர் உள்பட 6 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில், சென்னை அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் குழுவினர் தாமிரபரணி பணிமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக பணியாளர்களிடம் விசாரித்தோம், “அதிகாரிகள் இன்சென்டிவ் பெறுவதற்காக டிரைவர்களை ஒரு லிட்டருக்கு 5.5 கி.மீ மைலேஜ் கிடைக்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பார்கள்.

பணிமனை

ஏ.சி பேருந்துகள் ஒரு லிட்டருக்கு 3 கி.மீதான் மைலேஜ் தரும். கி.மீ குறைவாக மைலேஜ் கொடுக்கும் பேருந்துகளுக்கு கூடுதலாக டீசல் வழங்கியும்,  கி.மீ அதிகமாக கிடைக்கும் பேருந்துகளுக்கு குறைவாக வழங்கியும் பேருந்துகள் இயக்கப்பட்டதால் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை கடந்த ஓராண்டாக நடைமுறைப்படுத்தியதால்தான் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் பணம் கையாடலுக்கான வாய்ப்பு இல்லை. கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரிக்காததால் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *