
சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மதுரையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திப்பாரா என்பதுதான் தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு மதுரை வந்த அமித்ஷாவை, விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வரவேற்றனர்.
பின்பு விமான நிலையம் அருகில் தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அமித்ஷா, இன்று காலை கட்சி நிர்வாகிகள் சிலரிடம் ஆலோசனை நடத்தினார். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணி, பாமக, ஐஜேகே, தமாக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளையும், தென் மாவட்டத்தில் பலமாக உள்ள சாதி அமைப்பு தலைவர்களையும் அழைத்து பேசலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், இதுவரை அப்படி யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று காலை 11 மணிக்கு மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த அமித் ஷா-வுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் தல புராணம், சிறப்புகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. வழிபட்டபின்பு அங்கிருந்து விடுதிக்கு கிளம்பினார் அமித் ஷா.
அவர் தங்கியிருக்கும் விடுதியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்கிறார். மாலை 4 மணிக்கு ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெறும கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு மாலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

அமித் ஷா வருகையை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதியும், தங்கும் விடுதி, ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் பகுதிகள் காவல்துறையின் பல அடுக்கு பாதுகாப்புக்கு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கோயிலில் அமித்ஷாவை வரவேற்க வந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இலங்கைத் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும். இந்திய மீனவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்தேன். மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.