
பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வுக்கு கர்நாடக அரசே ஏற்பாடு செய்தது. இதில் எங்களை பலிகடாவாக ஆக்க முயற்சிப்பது அநீதியானது என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்த வெற்றி விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். கப்பன் பூங்கா போலீஸார் ஆர்சிபி அணிக்கு வெற்றி விழா ஏற்பாடு செய்த ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில‌ கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சியை நடத்திய டிஎன்ஏ நிறுவனம் ஆகியவற்றின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.