
கனிமவளங்கள் மீது தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் புரவிபாளையத்தில் கே.டி.செந்தாமரை என்பவர் நடத்தி வரும் குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாகக்கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் கடந்த 2021 -ம் ஆண்டு மார்ச் மாதம் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த பொதுநல வழக்கு முடித்து வைக்கப்பட்டது.