
மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனா உடைந்த பிறகு தாக்கரே குடும்பத்திற்கு சிவசேனா கிடைக்காமல் போய்விட்டது.
கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் சிவசேனாவின் பெயரும், சின்னமும் சென்றுவிட்டது.
இச்சம்பவத்திற்குப் பிறகு உத்தவ் தாக்கரேயின் செயல்பாட்டில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற பிறகு அவருடன் எந்தவித உறவும் வைத்துக்கொள்ளாமல் இருந்த உத்தவ் தாக்கரே, இப்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.
ராஜ்தாக்கரேயும் தனது நவநிர்மாண் சேனா கட்சியை பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்க்க முயன்றார். ஆனால் அந்த முயற்சி பயனளிக்கவில்லை.
அதோடு கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா படுதோல்வியைச் சந்தித்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் இத்தேர்தலில் கடுமையான சரிவைச் சந்தித்தது.
இத்தோல்வி தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேர காரணமாக அமைந்துள்ளது. மராத்தி பிரச்னை வந்த போது இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.
இதற்கு உத்தவ் தாக்கரேயும் சாதகமாகப் பதில் கொடுத்திருந்தார். இதையடுத்து இருவரும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பார்கள் என்று தொடர்ந்து செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. இப்பிரச்னை குறித்து உத்தவ் தாக்கரேயிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த உத்தவ் தாக்கரே, ”கூட்டணி குறித்து இரு கட்சிகளின் தொண்டர்களின் மனதிலும் எந்தவித குழப்பமும் இல்லை. மகாராஷ்டிரா மக்கள் விரும்புவது நடக்கும்” என்று தெரிவித்தார்.
இருப்பினும் நவநிர்மாண் சேனாவுக்கும் தனது கட்சிக்கும் இடையே தற்போது ஏதேனும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறதா என்ற கேள்விகளுக்கு உத்தவ் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மோசமான தோல்விக்கு முன்னதாகவே இரு கட்சிகளின் கூட்டணி குறித்த தகவல்கள் வெளியானது.
கூட்டணி தொடர்பாக இருவரும் போன் மூலம் பேசி இருக்கலாம் என்று உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நவநிர்மாண் சேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் தேஷ்பாண்டே, ”சிவசேனா(உத்தவ்) முறைப்படி கூட்டணி தொடர்பாக ராஜ்தாக்கரேயிக்குத் தகவல் கொடுக்கவேண்டும். அல்லது இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்னைக்கு போன் செய்து பேசவேண்டும்” என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ”இவ்விவகாரத்தில் நான் கருத்து தெரிவிக்க முடியாது. கூட்டணி வைப்பது குறித்து இரு தாக்கரேக்களும்தான் முடிவு செய்யவேண்டும்” என்று தெரிவித்துவிட்டார்.
இவ்விவகாரம் குறித்து சிவசேனாவை இரண்டாக உடைத்த துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
மற்றொரு துணை முதல்வர் அஜித் பவாரும் இவ்விவகாரத்தில் தாக்கரே சகோதரர்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று தெரிவித்துவிட்டார். ஆனால் தாக்கரே சகோதரர்களின் கூட்டணியைக் காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே கூறுகையில், ”மராத்தியர்களின் நலன் மற்றும் மதவாத பா.ஜ.கவை அப்புறப்படுத்த தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேர இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இருவரும் ஒன்று சேர்ந்தால் நாங்கள் வரவேற்போம்” என்று தெரிவித்தார்.

இது குறித்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், ”மீடியாவிற்கு அறிக்கை கொடுப்பதால் கூட்டணி உருவாகிவிடாது. உத்தவ் தாக்கரேயும், ராஜ்தாக்கரேயும் பேசவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
ராஜ்தாக்கரே கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.கவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தார். ஆனால் இப்போது கூட்டணிக்கு பா.ஜ.க உடனான தொடர்பை முழுமையாகத் துண்டிக்க வேண்டும் என்று ராஜ்தாக்கரேயிக்கு உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.