
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்காவ் அருகில் உள்ள மத ஊர்வலகத்தில் கலந்து கொண்டுவிட்டு மும்பைக்கு திரும்ப தயாரானார். அவர் மும்பையில் இருந்து ஜல்காவிற்கு புறப்பட தயாரானபோது அவரது விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. ஜல்காவ் வந்த பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக முக்தாநகர் பகுதியில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கு ஏக்நாத் ஷிண்டே சென்றார்.
அவருடன் அமைச்சர் கிரீஷ் மகாஜன் மற்றும் குலாப்ராவ் ஆகியோர் சென்றார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஏக்நாத் ஷிண்டே ஜல்காவ் வந்தார். அவர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விமானம் இருக்கும் இடத்திற்கு வந்தார். ஆனால் பைலட் விமானத்தை இயக்க முடியாது என்று மறுத்துள்ளார்.
தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி விமானத்தை இயக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். அதோடு விமானத்தை இயக்க புதிய அனுமதி தேவை என்றும் தெரிவித்தார்.
உண்மையில் விமான பைலட்டிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால்தான் விமானத்தை இயக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
ஏக்நாத் ஷிண்டேயுடன் வந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பைலட்டிடம் பேசி விமானத்தை எடுக்க சொன்னார்கள். இப்பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் வரை நடந்தது. அமைச்சர் கிரீஷ் மகாஜன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பேசினார். இறுதியில் ஒரு மணி நேரம் கழித்த பிறகுதான் பைலட் விமானத்தை கிளப்பினார்.
இது குறித்து அமைச்சர் கிரீஷ் மகாஜன் கூறுகையில்,”பைலட்டிற்கு உடல் நலப்பிரச்னை இருந்தது. அதோடு விமானத்திலும் சில தொழில் நுட்ப கோளாறு இருந்தது. சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் பேசினோம். அவர்கள் பைலட்டிடம் பேசினர்” என்றார்.

மும்பை திரும்பி வரும்போது மும்பையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டிய பெண்ணையும் ஏக்நாத் ஷிண்டே தனது விமானத்தில் மும்பைக்கு அழைத்து வந்தார். சீத்தல் என்ற அப்பெண் தனது கணவருடன் மும்பைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அப்பெண் தான் செல்லவேண்டிய விமானத்தை தவறவிட்டார். இது குறித்து அமைச்சர் கிரீஷ் மகாஜனுக்கு தெரிய வந்தது. உடனே அவர் சீத்தலையும் அவரது கணவரையும் தங்களது விமானத்தில் அழைத்துச் செல்ல முன்வந்தார். மும்பை விமான நிலையத்தில் அப்பெண் செல்லவேண்டிய ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது.