
நாளை நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை மதுரை வருகிறார்.
அப்போது கூட்டணிக் கட்சித்தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அவரைச் சந்திக்க முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமித் ஷாவைச் சந்திக்க அனுமதி கேட்டதாகவும் அதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்றும் சொல்லப்படும் நிலையில், ‘திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் அப்பாயின்மெண்ட் கேட்கவில்லை’ என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
அதுமட்டுமின்றி, “நாங்கள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இணைத்துள்ளது” என்று பேசியுள்ளதும் அதிமுக-வினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளரிடம் பேசும்போது, “234 தொகுதிகளிலும் பணியாற்றக் கழக நிர்வாகிகளின் கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம்.
வருகின்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அமமுகவினர் போட்டியிட்டாலும், கூட்டணிக் கட்சியினர் போட்டியிட்டாலும் தீய சக்தி திமுகவை வீழ்த்த ஆலோசனை செய்து வருகிறோம்.
இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் எனப் பிரதமர் அறிவித்தது சரியான முடிவு. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உரிய பங்கீடு கிடைக்கும்.
தொகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்றுதான் மத்திய அரசு முடிவு செய்துள்ளனர். யூகத்தின் அடிப்படையில் முதல்வர் பேசி வருகிறார். திமுக ஆட்சிக்கு எதிராக தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் திமுக அரசு, மத்திய அரசுக்கு எதிராக மார் தட்டுவதைப் பார்க்கும்போது வடிவேல் காமெடி போல் உள்ளது.
மதுரைக்கு வந்த முதல்வரால் என்ன நடந்தது? சாக்கடையான கால்வாயைத் துணி வைத்து மூடியதன் மூலம் அவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது.
முதல்வரை வரவேற்கப் பிரியாணி கொடுத்து லாரியில் ஆட்களை ஏற்றி வந்ததைச் செய்திகளில் பார்த்தேன். கூட்டணிக் கட்சிகளை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது எனத் திமுக பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது. 2026 தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறுவோம்.
கலைஞர் காலத்திலே பத்தாண்டுக் காலம் ஆட்சிக்கு வர முடியாமல் திமுக தத்தளித்த நிலையில் பாஜகவைக் காரணம் காட்டி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார்.
சிறுபான்மை மக்கள் உட்பட அனைவரும் திமுகவின் ஆட்சியைப் புரிந்து கொண்டார்கள். 2026ல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். பாஜக கூட்டணியையும், எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு” என்றவரிடம்,

“மதுரை வரும் அமித் ஷாவைச் சந்திப்பீர்களா?” என்றதற்கு,
“திருச்சியில் முக்கிய நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள ஏற்கனவே தேதி கொடுத்து விட்டதால் மதுரை வரும் அமித்ஷாவைச் சந்திக்க அனுமதி கேட்கவில்லை” என்றவரிடம்
“ஏற்கனவே அமித்ஷா சென்னை வந்தபோது ஓபிஎஸ்ஸைச் சந்திக்கவில்லை, அவருக்கு பாஜக கூட்டணியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?” என்றதற்கு,
“ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறார் என்பதைத் தமிழக பாஜக தலைவர் தினமும் தெரிவித்து வருகிறார். ஓபிஎஸ்ஸுக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை அமித்ஷா சென்னை வந்தது குறிப்பிட்ட நிகழ்வுக்காகத்தான். நாளை மதுரையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கலாம். அதுகுறித்து பாஜக நிர்வாகிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனாலும் நான் அனுமதி கேட்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் பின்னால் சட்டமன்ற உறுப்பினர்களும், உரிமை மீட்புக் குழுவும் உள்ளன. தேர்தல் நேரத்தில் அவருக்கான முக்கியத்துவம் தெரிய வரும்” என்றவரிடம்,
“எடப்பாடி தலைமையிலான அதிமுகவை ஏற்றக்கொண்டு பாஜக, கூட்டணியில் இணைத்துக்கொண்டதே” என்ற கேள்விக்கு
“அரசியலில் எந்த ஒரு முயற்சிக்குமே முற்றுப்புள்ளி கிடையாது. அதிமுக என்பது அம்மாவின் கட்சி. அம்மாவின் தொண்டர்கள் எந்தக் கட்சியிலிருந்தாலும் ஓரணியில் சேர்ந்தால்தான் தீய சக்தி திமுகவை வீழ்த்த முடியும்.
யாரெல்லாம் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர நினைக்கிறார்களோ அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும்” என்றவர்,
“திமுக கூட்டணி உறுதியாகத்தான் உள்ளது. ஆனால், மக்கள் புறம் தள்ளுகின்றனர். ஆர்.கே.நகரில் இதே கூட்டணிதானே இருந்தது. 2026-ல் திமுக கூட்டணியின் சாயம் வெளுத்து விடும் எங்கள் கூட்டணிக்கு உறுதியாகப் பல கட்சிகள் வரும். திமுக கூட்டணி தோற்பது உறுதி” என்றார்.