
`திமுகவில் உள்கட்சி பூசல் உருவாகி உள்ளது’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியிருக்கிறார்.
இது குறித்து ஆர்.பி உதயகுமார் வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது…
“மன்னராட்சிக்கு வழிவகுக்க உதயநிதி ஸ்டாலினுக்கு ` தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் – இளம் தலைவரின் பணி தொடரத் துணை நிற்போம்!’ என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை போட்டது திமுக. ஆனால், இது உதயநிதிக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை.
‘தீர்மானம் எந்த லட்சணத்தில் நிறைவேறும்’ என்று எனக்கு தெரியும். எனக்கு அது எல்லாம் தேவையில்லை. எனக்கு பதவி தான் வேண்டும்’ என்று உதயநிதி அழுத்தம் கொடுக்கிறார் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.
ஆக, மன்னராட்சிக்கு மகுடம் சூட்டும் நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை பேராபத்து சூழ்ந்துள்ளது. இதை தமிழ்நாட்டிற்கு உரக்க சொல்வோம்.
இதை மடைமாற்றவே, முதலமைச்சர் இல்லாத ஒன்றை பூதாகரம் ஆக்கி வருகிறார்”. என்றார். அதாவது உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுக்குழு கூட்டத்தில் தான் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகவும், அது நடக்காததால் அப்செட்டில் உள்ளதாகவும் கூறியுள்ளார் ஆர்.பி உதயகுமார்.
2027-ம் ஆண்டிற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தள்ளிப்போட்டது, தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டிற்கு பாஜக சதி செய்கிறது என்றும், அதற்கு எடப்பாடி பழனிசாமி துணை போகிறார் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.