
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரத்தை முடிவு செய்வதில் கோயில் நிர்வாகம் மற்றம் கோயில் விதாயகர்த்தா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இந்தப் பிரச்னையில் கும்பாபிஷேக நடத்தும் நேரத்தை முடிவு செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.
கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்தை முடிவு செய்வதில் இந்துசமய அறநிலையத்துறை வல்லுநர் குழு முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கும் நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குடமுழுக்கு விழா, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்குட நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி காலை 6:15 மணி முதல் 6:50 மணிக்குள் நடத்தப்படும். ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

யாகசாலை பூஜைக்காக ராஜகோபுரம் அருகில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாக சாலை மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 76 யாக குண்டங்கள் வைக்கப்பட்டு 12 கால யாகசாலை பூஜைகள் நடக்க உள்ளது. யாகசாலை பூஜைகளை பக்தர்கள் தரிசனம் செய்திடும் 2 ஆயிரம் சதுர அடியில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது.